கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவரான கரண், வேலைதேடி செருப்பை தேய்த்துக்கொள்ளும் இளைஞர். ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லும் கரண் 'தம்'மடிக்க நண்பனிடம் சிகரெட் கேட்கிறார். நண்பனோ டீ, சிகரெட் வேணுமென்றால் ஒரு கிலோமீட்டர் தூரம் போகணும் என்கிறார். அவ்வளவுதான் கரணுக்குள் ஐடியா அய்யாசாமி உதயமாகி ப்ளான் ஒன்றை போடுகிறார்.
கட் பண்ணினால் அடுத்த சீன். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே டீ கடை போட்டு சுய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்கிறார் கரண். இப்படியே போனால் எப்படி வில்லன் வேண்டுமே? இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் உருவத்தில் வந்து நிற்கிறது வில்லங்கம்.
சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் போகும் சண்முகராஜனிடம் போலீசுன்னா பணம் கொடுக்கமாட்டீங்களா....! என நாயகன் நியாயம் பேச, அடுத்த சீனில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி டீ கடையை இடித்துதள்ளுகிறார் சண்முகராஜன். இப்போ ஹீரோவுக்கு ஏழரை சனியன் தொடங்குகிறது. ஹீரோ வில்லனை (இன்ஸ்பெக்டர்) எதிர்ப்பதும், வில்லன் ஹீரோவை பழிவாங்குவதுமாகவே க்ளைமாக்ஸ் வரை நகர்த்துவது இயக்குனரின் திறமை.
க்ளைமாக்ஸிலாவது அணல் பறக்கும் என்று நம்பினால் பூ...பூ.. என்று சிரிக்கும் அளவிற்கு சின்னபுள்ளதனமாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நண்பனிடம் சிகரெட் கேட்கும்போதே நல்ல மாணவனுக்கான அடையாளம் கரணிடம் அடிப்பட்டு போகிறது. ஆனாலும் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் ஹீரோவை அடுத்த மாணவனுக்கு புத்திமதி கூற வைத்திருக்கிறார் இயக்குனர்.
இது பரவாயில்லீங்க. தீக்காயம்பட்டு வீட்டில் இருக்கும் கதாநாயகி உதயதாராவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று குணப்படுத்துகிறார் கரண். அட இந்த யோசனைகூட நாயகியின் பெற்றோருக்கு தெரியாமல் அதுவரை குத்துகல்லாட்டம் இருந்ததை நினைச்சாதான் காமெடியா இருக்கு.
பொருட்காட்சியில் பொம்மை கேட்டு அழும் குழந்தை மாதிரி இருக்கிறார் உதயதாரா. அப்படிபட்ட அப்பிராணியை ஆடை குறைக்கவைத்து அரைகுறையாக ஆட வைத்திருப்பது ரசிப்பதற்கில்லை.
கரணோட பிரண்டுன்னு சொல்லிட்டு திரியுற திவ்யாவுக்கு திடீர்னு கல்யாண சீன் ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குனர். அதன்பிறகும் அந்த பொண்ணு புகுந்தவீட்டுக்கு போகாம கல்யாணம் ஆன சுவடே தெரியாம (நெற்றிபொட்டு, தாலி இல்லாமல்) பசங்களோடேயே சுத்துற மாதிரி திரைக்கதையில் பெரிய ஓட்டை போடும்போது நம்ம தலையும் சுத்துது சாமி.
"சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள் சிசர் மனோகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அசால்ட்டாக வருகிறார். இன்ஸ்பெக்டரை காட்டிலும் அதிக சவுண்ட் விட்டபடி கரணை அடிக்கிறார்" என்ன கொடுமை சரவணன்.....
ஜாசிகிப்ட் இசையில் 'கடவுள் எதற்கு....' பாடலில் சினேகனின் வரிகளும் சித்ராவின் குரலும் உருக வைக்கிறது.
+2 படிப்பை முடித்த சின்ன பையன்கள்கூட கால்சென்டர், மார்க்கெட்டிங் என்று கைநிறைய சம்பாதிக்கும் இந்த காலத்தில் இன்னமும் எம்ப்ளாய்மெண்ட் வாசலில் கல்லூரி மாணவர்கள் கெஞ்சி நிற்கும் காட்சிகளை யோசித்த திருமலையை என்னவென்று பாராட்டுவது.
ஷார்ப்னரில் பென்சிலை சீவி கரணின் காதில் சொருகி அடிக்கபோகும் காட்சியில் மட்டும் ஷார்ப். இதுமாதிரி பத்து சீன் பண்ணியிருந்தால்கூட படம் பிரமாதமா வந்திருக்கும்.
சரி படத்தை மறுபடியும் ஞாபகம் வைத்து விமர்சனம் எழுதி நம்ம மூளையையும் ஏன் கெடுத்துக்கணும்.
நமத்துபோன 'தீ நகர்'.