பசுத்தோல் போர்த்திய புலியாக ஸாரி நரியாக வலம்வருபவர் சினிமா பைனான்சியர் நாசர். இவரிடம் அடியாளாக இருப்பவர்தான் நாயகன் சந்தோஷ். வெட்டிட்டு வா... என்றால் கட்டிட்டு வர்ற கெட்டிக்கார பையன்.
ரமேஷ்கண்ணா, சுனில் உள்ளிட்ட நட்பு வட்டாரம் சந்தோஷ் இன்ஜினியர் வேலை செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் சந்தோஷ் அடியாளாக இருப்பது தெரியவர 'நான் ஏன் இப்படி ஆனேன்' என்று தனது கடந்த கால சம்பவங்களை சந்தோஷ் விளக்க, சென்டிமெண்ட் பிழியலுடன் முடிகிறது ப்ளாஷ்பேக்.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாசரும், மாஜி எம்.பியான ஜே.பியும் (JB) நடிகை அங்கீதா மேல் மோகம் கொண்டு திரிகிறாகள். அவர்களின் எண்ணம் புரிந்து அங்கீதா அவமானப்படுத்துகிறார். ஆத்திரமடையும் வில்லன்கள் அங்கீதாவை கடத்தி தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ள திட்டம் போடுகின்றனர்.
அவர்களிடமிருந்து அங்கீதாவை காப்பாற்ற சந்தோஷ் முயற்சிசெய்ய, நாயகனின் நல்ல மனசு, அங்கீதாவை காதல் கொள்ளச்செய்கிறது. காமப் பிசாசுகள் ஒரு பக்கம் துரத்த, காதல் பூ மறுபக்கம் பூக்க விறுவிறுப்பும் கிளுகிளுப்பும் கலந்த க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம்.
முகத்தோற்றம், நடிப்பில் தேற்றம் என முந்தைய படத்திலிருந்து சந்தோஷிடம் நிறையவே மாற்றம். ஆக்ஷ்னில் ஆவ்ரேஜை தாண்டியவர் கொஞ்சம் முயற்சி செய்தால் செண்டம் எடுக்கலாம்.
நடிகையாக வரும் அங்கீதாவுக்கு பல காட்சிகளில் அரைகுறை 'அங்கி'தான். தன்னை புரிந்துகொண்ட ஆண்கள் யாருமில்லை என்று வருத்தம் தோய்த்து பேசும் இடத்திலும் புற்களின் மேல் சுவடு தெரியாமல் படரும் பனிதுளி போல சந்தோஷின் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதலை படர விடும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார்.
ப்ளாஷ்பேக்கில் சந்தோஷின் குடும்பத்தினராக வரும் நிழல்கள் ரவி, குயிலி, நந்தீதா அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவு பரிதாப முடிச்சு. நாசருக்கு இந்த தீனியெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி. சில காட்சிகளில் வந்தாலும் மணிவண்ணன் மனதில் நிற்கிறார்.
ரமேஷ்கண்ணா கோஷ்டிகள் காமெடி என்ற பெயரில் வறுத்தெடுக்கிறார்கள். அங்கீதாவின் மேனேஜராக வரும் V.M.C. ஹனிபா சபாஷ் போட வைக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் எந்த ஈர்ப்பும் இல்லை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பார்கவன். இன்னும் கொஞ்சம் பாடுபட்டிருந்தால் 'திரு. ரங்கா' பலமாகியிருப்பான்.