உலகமகா அயோக்கியத்தனங்களையெல்லாம் அரங்கேற்றிவிட்டு கடைசியில் உள்ளம் திருந்தும் ஒரு காமக்கொடூரனின் கதை இது.
பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழவைத்து காம பசியை தீர்த்துக்கொள்ளும் இரக்கமற்ற வாலிபன்தான் நாயகன் பிரவின்காந்த். எத்தனையோ பெண்களை பார்த்த மாத்திரத்திலேயே ருசி காணும் பிரவின்காந்த், நாயகி குர்லின் சோப்ராவின் அழகில் மயங்கி அவரை வேறுவிதமாக வீழ்த்தி கற்பை சூறையாடுகிறார்.
குர்லின் சோப்ராவுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக கொதித்தெழும் மற்றொரு நாயகி சோனிகா, குர்லின் சோப்ராவை கெடுத்தவனை கண்டுபிடித்து போலீஸில் பிடித்துதர முயற்சிக்கிறார். இதையறியும் பிரவின்காந்த் தனக்கெதிராக செயல்படும் சோனிகாவின் வாழ்க்கையையும் சீரழிக்க முயல்கிறார்.
பிரவின்காந்த் காய் நகர்த்தலில் சோனிகாவும் மாட்டிக்கொள்கிறார். குர்லின் சோப்ராவுக்கு நீதியும் சோனிகாவுக்கு விடுதலையும் கிடைக்கிறதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
பார்த்திபனின் 'புதியபாதை' பாணியிலான கேரக்டரில் புகுந்து விளையாடியிருக்கும் பிரவின்காந்துக்கும் இனி கோடம்பாக்க விழாக்களில் நடிகருக்கான நாற்காலி ஒதுக்கப்படும். இரட்டை அர்த்த வசனங்களை எல்லைமீறாமல் பார்த்திருந்தால் கதாசிரியராக, இயக்குனராக நெருடல் இல்லாத பாராட்டுக்களை பெற்றிருப்பார்.
கதைகளம் ஊட்டிக்கு நகர்த்தப்படும்போது திரைக்கதையில் விழும், முடிச்சு பாக்யராஜ் ஸ்டைல் பரபரப்பு.
இரண்டு நாயகிகளில் அதிக வாக்குகள் பெறுவது குர்லின்சோப்ராதான். 'சோனி'காவின் நடிப்பில் இன்னும் பயிற்சியும் முயற்சியும் அவசியம்.
படத்தில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வை இழுத்துபிடிப்பது விவேக்கின் காமெடிதான். நகைச்சுவை என்ற பெயரில் சில இடங்களில் 'ஏ'டாகூடமாகவும் பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவு, இசை எதுவும் பெரிதாக கவரவில்லை.
'துள்ளல்' கமர்ஷியல் தூறல்.