கலைஞரின் 'சாரப்பள்ளம் சாமுண்டி'யே உளியின் ஓசையாக உருபெற்றுள்ளது.
சோழர் ஆட்சியின் கலைப்பெருமையை எதிர்காலம் மெச்ச வேண்டும் என்ற வேட்கையுடன் பெரிய கோயில் கட்டும் பணியில் ஈடுபடுகிறான் ராஜராஜசோழன். கோயிலில் ஆடற்கலையை சிலையாக வடிவமைக்கும் பொறுப்பு பெருந்தட்சன் என்னும் சிற்பியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சிலை வடிக்க நடன மங்கை ஒருத்தியை மாடலாக தேர்வு செய்வதற்குள் மண்டை காய்ந்து போகிறான் சிற்பி. இறுதியில் முத்துநகை என்ற நடன மங்கையின் திறமையிலும் குறை கண்டுபிடிக்கும் சிற்பி, ஆடு மேய்க்கும் மூதாட்டியின் பேத்தியின் நடனத்திலும் அழகிலும் சொக்கிப்போய் அவளையே மாடலாக தேர்வு செய்கிறான. சிலைவடிக்கும் பணியில் ஏற்படும் இடையூறும் மாடலாக வந்த அழகியின் பின்னணியும் படத்தின் உயிர் நாடியாக முடிவது கதை.
நவீன காதல் மற்றும் அரிவாள் கலாச்சார படங்களுக்கு இடையே வரலாற்று பின்னணியில் உருவாகியிரு்ககும் உளியின் ஓசை ரிலாக்ஸை தருகிறது. ஆங்காங்கே நகைச்சுவை பெயரில் வறுத்தெடுக்கும் திரைக்கதையின் போக்கை சற்றே மாற்றியிருந்தால் இன்னும் ஒருபடி மேலே பாராட்டியிருக்கலாம்.
சிற்பி கதாபாத்திரத்திற்கு நச்சென்று பொருந்தியுள்ளார் வினித். நடனத்தை பற்றி விமர்சிக்க உனக்கென்ன தகுதியிருக்கிறது? என்று தனக்கெதிராக வீசும் கேள்விகளுக்கு தனது அபிநயத்தால் பதில் சொல்லும் காட்சியில் வினித்தின் சலங்கை ஒலி சபாஷ்போட வைக்கிறது.
முத்துநகை கதாபாத்திரத்தில் அகங்காரத்தையும், செறுக்கையும் பிரதிபலிக்கும் காட்சிகளில் அக்ஷயாவின் நடிப்பு ரத்தினம். பாம்பு நடனத்தில் காட்டும் ஆக்ரோஷத்தை பாராட்டி தியேட்டரில் எழுகிறது கரகோஷம்.
கலைஞரின் படமென்பதால் பக்கம் பக்கமாக வசனமிருக்குமோ என்ற பயத்துடன் அமர்ந்தால், திரைக்கதைக்கு தேவையான வசனதச்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கும் இயக்குனரிடமும் ஒரு நல்ல சிற்பியின் அடையாளம்.
சிலை வடிக்க மாடலாக வரும் கீர்த்தி சாவ்லா யாரென்ற சஸ்பென்ஸ் உடையுமிடத்தில்தான் உளியின் ஓசையின உயிர்ப்பே அடங்கியுள்ளது. சஸ்பென்ஸை அழகாக கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.
தனது குற்றத்திற்கு கண்களை குருடாக்கி வினித் தனக்குத்தானே தண்டனை தரும் காட்சியில் "கண்களே என் முகத்தின் இரண்டு புண்களே" என்று புலம்பியழும்போது படம் பார்ப்பவர்களின் கண்களிலும் பீறிடுகிறது கண்ணீர்.
இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களுமே தேனாக தித்திக்கிறது.
காதலும், கலையும் கைகோர்த்தது இந்த 'உளியின் ஓசை'.