காதல் என்ற மலரை அழகாக சரம் தொடுத்து தந்திருக்கும் நேர்த்திக்கு பிடியுங்கள் ஜீவா ஒரு பூங்கொத்து...
வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் சந்தோஷ சாரலில் நனைத்தெடுப்பவர் இன்ஜீனியர் விநய். பேச்சு - செயல் எல்லாவற்றுக்கும் அளவுகோல் வைத்திருப்பவர் சதா. வெவ்வேறு தளத்தில் இருக்கும் இருவரும் காதல் என்ற கோட்டில் இணைகிறார்கள்.
அறிமுகமில்லாத பெண்களிடம்கூட போகிறபோக்கில் 'கடலை' போடும் ஜாலிக்கு சொந்தக்காரரான விநயின் பழக்கமே அவரது காதலுக்கு வில்லனாய் வந்து நிற்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளெல்லாம் ஒன்றிணைந்து விநயை தவறான ஆளாகவே காட்ட, சதாவின் மனசில் சந்தேகம் பிறாண்ட ஆரம்பிக்கிறது. காலபோக்கில் இருவரின் காதலும் கண்ணாமூச்சி ஆட, இடையில் வந்து சேர்கிறார் இன்னொரு நாயகி தனிஷா. சதா விநயை வெறுக்க, தனிஷா ஒருதலையாய் காதலிக்க, வெற்றி பெறுவது எந்த காதல் என்பதை தித்திப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் ஜீவா.
அப்பாஸ், மாதவன் வரிசையில் இன்னொரு சாக்லெட் ஹீரோவாக விநய். ஜாலியும் - சாதுர்யமும் கலந்த பேச்சு, சுட்டி குழந்தையின் துறுதுறுப்பு என படம் ஆரம்பித்த சொற்ப நிமிடங்களிலேயே மனசுக்குள் இடம்பிடித்து விடுகிறார்.
அட... சதாவா இது! வானம் பார்த்த பூமியாய் சமீபகாலமாக வறண்டு போயிருந்தவரின் தோற்றம் - நடிப்பில் 'சிம்லா' ஸ்பெஷல் ஜில்லிப்பு.
விநயுடனான காதலை முறித்துக்கொண்டதாக கூறும் சதா, ரெஸ்டாரண்டில் விநய் இருப்பது தெரிந்துகொண்டு லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் அந்த சில நிமிடங்களில் ஆஹா.... பிரம்மாதம். சதாவின் மனசில் விநய்க்கு இடமில்லை என்று தெரிந்ததும் அந்த இடத்திற்கு அப்ளிகேஷன் போடும் புதுமுகம் தனிஷாவின் நடிப்பில் பல படங்களில் நடித்த அனுபவம். வெரிகுட் தனிஷா.
விநய்யின் காதலுக்கு வில்லங்கம் ஏற்படுத்தும் நண்பனாக ராஜுசுந்தரமும் பளிச்சிடுகிறார். வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருபவர், தங்கை பார்த்துவிட்டாள் என்பதற்காக அந்த பெண்ணை விநய்யின் காதலி என்று பொய் சொல்லி எஸ்கேப்பாகும் காட்சியில் நடிப்பில் நல்ல 'ஸ்டெப்' எடுத்து வைத்திருக்கிறார்.
"பொண்ணுங்களும் சுவிங்கமும் ஒண்ணுதான். இரண்டுமே ஆரம்பத்தில் இனிப்பாகதான் இருக்கும்" மனசுக்குள் 'ஒட்டி'க் கொள்ளும் இதுபோன்று வசனங்களில் எஸ். ராமகிருஷ்ணனின் பேனா எதார்த்தம் நிரப்பியிருக்கிறது.
டமடம இசையில் கதையை வெறித்தோட செய்யாத ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு சபாஷ். 'ஜூன் போனால்....', 'வைகாசி நிலவே....' பாடல்களில் கவிஞர்களின் வரிகளுக்கும் பாடகர்களின் குரலுக்கும் இடம் கொடுத்திருப்பது சிறப்பு.
விநய் மாதிரியான காதலை பெறவேண்டும், சதா மாதிரியான காதலை புரிந்து திருந்த வேண்டும் என இருவேறு கோணங்களில் காதலர்களுக்கு அரிதான பரிசு கொடுக்கிறது ஜீவாவின் இயக்கம்.
இயக்கம் - ஒளிப்பதிவு என்ற ஜீவாவின் இரட்டை குதிரையில் 'உன்னாலே உன்னாலே' சுகமான சவாரி.