- ஜான்
நூற்றாண்டுகள் கடந்தும் தங்கள் படைப்பின் வழியாக சாகாவரம் பெற்று ஜீவித்திருக்கும் கலைஞர்கள் மிக சொற்பமே. சார்லி சாப்ளினுக்கு அப்படியொரு கீர்த்தி அமைந்திருக்கிறது.
வறுமையான சூழலில் பிறந்த ஒருவன் உலகமே வியக்கும் அளவுக்கு புகழ் பெற்றது என்ற வகையில் - இவரது வாழ்க்கை ஓர் தன்னம்பிக்கை நூல்.
இனவாத அழித்தொழிப்பில் ஈடுபட்ட ஹிட்லரை பல வல்லரசுகளே பயத்துடன் அணுகியபோது வெளிப்படையாக தனது படங்களில் ஹிட்லரை விமர்சித்தவர் என்ற வகையில் - சாப்ளின் ஒரு போராளி.
கண்டிப்பான, தான் நினைத்ததை திரையில் கொண்டுவர நினைக்கும் ஒரு இயக்குனர் என்ற வகையில் - இவர் ஒரு சிறந்த படைப்பாளி.
ஆனால் நமக்கெல்லாம் சாப்ளின் என்பவர் ஒரு சிரிப்பு நடிகர் மட்டுமே! ஆனால் இது உண்மையல்ல. அவரது பன்முக ஆளுமையை மறைப்பது என்பதை என் சொக்கனின் 'சார்லி சாப்ளின் கதை' புத்தகத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
சாப்ளினின் படங்கள் எத்தனை தூரம் மக்களை சிரிக்க வைக்கிறதோ, அத்தனை தூரம் துயரத்தை ஏற்படுத்துபவை. சமூக அவலங்களை, தனிமனித சோகங்களை சிரிப்பு மருந்து தடவித்தந்த மாமேதை அவர்.
சாப்ளினின் மணவாழ்க்கை அவரது திரைவாழ்க்கையைப் போல சிறந்ததாக அமையவில்லை. (ஒரு துறையில் தங்களை முழுதாக அர்ப்பணித்துக் கொள்ளும் கலைஞர்களுக்கு முதல் தொந்தரவாக மாறுவது வீடும் அவரது மனைவியும். கமல்ஹாசன் முதல் சாப்ளின் வரை இதற்கு நிறைய ஆதாரங்களை காட்டமுடியும். இந்த சங்கடம் ஆழமாக ஆராயப்படவேண்டியது)
திரையில் பார்ப்பது போல் சாப்ளின் சிரிப்பு மட்டுமே செய்யக்கூடியவரல்ல என்கிறார் மார்லன் பிராண்டோ. இவர் சாப்ளினால் அவர் படத்தில் நடிக்க அழைக்கப்பட்டு பாதியில் தானாகவே விலகிக்கொண்டவர். இவரது அனுபவத்தை பொறுத்தவரை சாப்ளின் ஒரு சாடிஸ்ட் என்பது இவர் கருத்து.
பல்வேறு மறைக்கப்பட முகங்களை உடைய சாப்ளினின் வாழ்க்கை அவரே எழுதிய சுயசரிதை வழியாக வெளியுலகுக்கு தெரியவந்தது. ஆனாலும் பல விஷயங்களை அதில் மாற்றி எழுதியுள்ளார் என்ற சர்ச்சையும் உண்டு.
கிழக்குப் பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல், இப்படியான சர்ச்சைகளுக்குள் புகாமல் கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சாப்ளினை அதிகம் அறிந்து கொள்ள ஏற்ற நூல் என்ற வகையில் இது முக்கியமானது.
|