- ஜான்
"ஒரு திரைப்படம் எடுப்பது என்ற முடிவு பிறந்த நேரத்திலிருந்து - அது தியேட்டரில் ரிலீஸ் ஆகிறவரையும் - ஏன் அதற்குப் பின்னரும் கூட - அத்துடன் இடைவிடாது தொடர்பு கொண்டவர் புரொடக்ஷ்ன் மானேஜர் என்கிற தயாரிப்பு நிர்வாகிதான். கதாசிரியரிலிருந்து, விளம்பர டிஸைன்கள் வரைபவர் வரை, எல்லோரிடமும் வேலை வாங்குவது அவர்தான். அவருக்கு நிதி நிர்வாகமும் தெரிந்திருக்க வேண்டும்; கதையமைப்பைப் பற்றிய ஞானமும் இருக்கவேண்டும்; ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், டைரக்டர் என்ற பல தொழில் நுட்பக் கலைஞர்களின் பணியுடன் அறிமுகம் இருக்க வேண்டும்; நடிக, நடிகையரின் நம்பிக்கையும் மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும்; ஸ்டுடியோக்களிலும், லேபரட்டரிகளிலும் நல்ல தொடர்பு இருக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்களைக் கையாளும் மந்திர சக்தியும் அவரிடம் இருக்க வேண்டும்.
தமிழ்த் திரையுலகில் இந்த மாதிரி குணாதிசயங்களைக் கொண்ட சில சிறந்த தயாரிப்பு நிர்வாகிகள் பணியாற்றி வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஏ.எல்.எஸ். வீரய்யா. திரு. ஏ.எல். சீனிவாசனின் கம்பெனியில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியதால் வீரய்யாவுக்கு 'ஏ.எல்.எஸ்.' என்பது இனிஷியல் மாதிரி ஆகிவிட்டது. மற்ற பல திறமைகளோடு நேர்மையும், விசுவாசமும் அவரிடம் குடிகொண்டிருப்பதால், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகிலும், அதைத் தொடர்ந்து சின்னத் திரையுலகிலும் அவருடைய பணி தொடர்ந்து வருகிறது."
- எஸ். வீரய்யா எழுதியிருக்கும் 'திரையுலகம் ஒரு சமுத்திரம்' புத்தகத்திற்கு நடிகரும் துக்ளக் ஆசிரியருமான சோ அளித்துள்ள இந்த முன்னுரையே இந்த நூலைப் பற்றி அனைத்தையும் கூறிவிடுகிறது.
மொத்தம் 27 தலைப்புகளில் டி.ஆர். மகாலிங்கம் முதல் சத்யராஜ் வரை தமிழ் திரையுலகின் முக்கிய நபர்களுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் எஸ். வீரய்யா.
திரைக்கு வெளியே நடக்கும் பிறர் அறியாத இவ்வனுபவ தொகுப்பின் வழியாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, கண்ணதாசன், ஏ.பி. நாகராஜன் உள்ளிட்ட திரை ஆளுமைகளின் குணாதிசயங்களை மிக நெருக்கமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
28 மற்றும் 29-ம் தலைப்புகளில் எஸ். வீரய்யா எழுதியிருப்பவை திரைத்துறையினருக்கு அத்தியாவசிய கையேடு. இவ்விரு தலைப்புகளில் திரைப்படம் உருவாகும் முறை, செலவுகள், படத்திற்கான தோராய பட்ஜெட் ஆகியவை குறித்து விளக்கமாக குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
தனி நபர்களின் அனுபவ பகிர்வு சில வேளைகளில் சரித்திர பதிவாக மாறுவதுண்டு. எஸ். வீரய்யாவின் இந்நூல் அப்படியொரு அரிய முயற்சி!
|