- ஜான்
'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன.
தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன?
தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம்.
இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
'வெளியில் ஒருவன்' சிறுகதை தொகுதி மூலம் இலக்கிய பரப்பில் சலனத்தை ஏற்படுத்திய இவரின் 'காட்டின் உருவம்', 'தாவரங்களின் உரையாடல்' கதை தொகுதிகள் தமிழ் இலக்கியத்தின் முதல் வரிசையில் என்றும் இடம் பிடிப்பவை. 'உபபாண்டவம்' நாவலை தொடர்ந்து இவர் எழுதிய 'நெடுங்குருதி' நாவல் 2003-ம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலாக தேர்வு செய்யப்பட்டது.
சிறுகதை, நாவல்களுடன் கட்டுரை தொகுதிகள், நான்கு நாடகங்கள், உலக பிரசித்த பெற்ற குழந்தைகள் நூலான 'ஆலீஸின் அற்புத உலகத்தின்' தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது எழுத்து சாதனைகள்.
இலக்கிய பணியுடன் இரண்டற கலந்தது இவரது சினிமா விமர்சனம். ஆறு பாடல்கள், நான்கு சண்டைகள் என்ற ரசனையை மீறி எல்லைகளை விரித்துக் கொண்ட ரசனை இவருடையது. அதற்கு சாட்சியாய் விளங்கும் 750 பக்க ஆவணமே 'உலக சினிமா' என்ற இவரது புத்தகம்.
சினிமா வரலாறு - உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள - உரையாடல் தொடர்கிறது - சினிமா சில பார்வைகள் - உலகின் சிறந்த இயக்குனர்கள் - இந்திய சினிமா - சிறந்த இந்திய இயக்குனர்கள் - திரைப்பட விழாக்கள், விருதுகள் - குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்டரி - சினிமாவின் எதிர்காலம், ஆகிய தலைப்புகளில் லூமியர் சகோதரர்கள் இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்திய சினிமாவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
உரையாடல் தொடர்கிறது பகுதியில் இந்தியாவின் அடூர் கோபாலகிருஷ்ணன் முதல் ஜப்பானின் அகிரா குரசேவா வரை முப்பத்திரண்டு சினிமா ஜாம்பவான்களின் நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
சினிமா பல பார்வைகள் பகுதியில் பல்வேறு தலைப்புகளில் சினிமா சாதனையாளர்கள் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
மொத்தத்தில் இது சொல்லி விளக்க வேண்டிய புத்தகமல்ல, படித்து ரசனையை விஸ்தரிக்க வேண்டிய அற்புத களஞ்சியம்.
இறுதியாக....
அனைவராலும் மதிக்கப்படும் மாபெரும் கலைஞன் நடிகர் மார்லன் பிராண்டோ. நடிப்பைப் பற்றியும், சினிமாவைப் பற்றியும், அமெரிக்காவை குறித்தும் அவர் பார்வை எவ்வாறு இருந்தது?
'உலக சினிமா' நூலில் இடம் பெற்றுள்ள அவரது நேர்காணலின் சிறு பகுதி:
வெற்றி பெற்றவர்களை ரசிப்பது தானே மக்கள் சுபாவம்?
ரசிப்பதில் தவறில்லை. நடிகர்களை துதிபாடுவதும், ஆராதனை செய்வதும் அவனை ஒரு காவிய நாயகனாக்குவதும் தவறானது. உண்மையில் மக்கள் ஒருவனை எவ்வளவு ரசிக்கிறார்கள் என்பது அடுத்தவனை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதோடு சம்பந்தமுடையது.
நடிப்பு ஒரு கலை இல்லையா?
உங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுக்கே தெரியும் சினிமா நடிகர்கள் எவரும் கலைஞர்கள் அல்ல!
சில அரிய தருணங்களை நீங்கள் நடித்துக் காட்டியிருக்கிறீர்கள் அது மறக்க முடியாதது அல்லவா?
நான் என்ன, ஒரு வேசி கூட பல நேரங்களில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திதான் கொஞ்சுகிறாள். அவளிடம் இல்லாத உணர்ச்சிகளையா நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவளை கலைஞர் என்று நீங்கள் கொண்டாடுவீர்களா?
அப்படியானால் எந்த நடிகருமே கலைஞர் இல்லையா?
இல்லை.
ஒருவர் கூட இல்லையா?
ஒருவர் கூட இல்லை.
பலரும் சேர்ந்து கூட்டாக உருவாக்குவதால் சினிமா கலை இல்லை என்கிறீர்களா?
சிஸ்டன் தேவாலயம் கூட ஆயிரம் பேர் சேர்ந்து கட்டியதுதான். அங்கே மைக்கேல் ஆஞ்ஜலோ சிலைகள் வடித்திருக்கிறார். அது காலத்தை மீறிய கலையாகத்தானே இருக்கிறது.
ஷேக்ஸ்பியர் ஒரு கலைஞரா?
ஆம்.
பாடகர்கள் கலைஞர்களா?
இல்லை.
உங்களைப் பார்த்து நடிப்பைக் கற்றுக் கொண்டதாக அல்பசினோ போல பல நடிகர்கள் கூறுகிறார்களே?
அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை. அமெரிக்காவில் கலாச்சாரம் என்பதே கிடையாது. இங்கே கடைசி கலைஞன் இறந்துப் போய் நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பிக்காசோதான் நான் நேசிக்கும் கலைஞர். நாமெல்லாம் வியாபாரிகள்.
நீங்கள் ஒருபோதும் வசனத்தை மனப்பாடம் செய்ய மாட்டீர்ககளாமே?
வசனங்களை மனப்பாடம் செய்வது ஓர் அருவருப்பான செயல். நடிக்கும்போது எதிரே இருப்பவரின் முகத்தைத்தான் பார்க்கவேண்டுமே தவிர அவர்கள் பேசுவதை அல்ல. நல்ல வேளை நான் ஒருபோதும் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை.
இதற்காக நீங்கள் வருத்தப்பட்டதே இல்லையா?
சினிமாவில் உள்ள வசனம் எதுவும் மனப்பாடம் செய்யுமளவு மகத்தானதல்ல. ஷேக்ஸ்பியரைப் பற்றிக் கேளுங்கள். ஒரு முழு நாடகத்தையும் ஒரு வரி விடாமல் ஒப்பிக்கிறேன்.
ஆஸ்கர் விருதை மறுத்ததற்கு காரணம் என்ன?
பூர்வ குடிகளை நடத்தத் தெரியாத ஒரு தேசம் கொடுக்கும் விருதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதைவிடவும் அத்தனை கோடி அமெரிக்க மக்களும் பழங்குடி இந்தியர்களை பற்றி நினைப்பதற்கு அது ஒரு சரியான சந்தர்ப்பம் இல்லையா!
இந்த அரிய புத்தகத்தை கனவுப்பட்டறை வெளியிட்டுள்ளது!
|