சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
- 19.01.2009
By Amalan
காக்டெயில் ததும்பும் கண்கள், கவர்ந்திழுக்கும் காந்தமாக ஓரப்பார்வை, உதட்டுச் சுழிப்பு என எண்பதுகளில் பலரது மனசை குடைசாய்த்த கவர்ச்சி கன்னி யாரென்று கேட்டால் சில்க்ஸ்மிதா என கோரஸாக சொல்லும் குரல்கள் இப்போதும் ஏராளம். சில்க்கை கவர்ச்சி நடிகையாக மட்டும் அறிந்தவர்கள் பலரில் அவர் ஒரு நல்ல மனிதாபிமானி, பல வடிவில் அவரது மனது சோகங்கள் சுட்டெரித்தன என்பதெல்லாம் சில்க்கின் தூக்கு கயிறோடு சேர்ந்து தொங்கிய ரகசியங்கள்.
கவர்ச்சி நடிகை என்பது மட்டுமின்றி நல்ல மனுஷியாக வாழ்ந்து ஒருமுழக் கயிற்றுக்கு உயிரை இரையாக கொடுத்த சில்க்குடனான தனது பிளாஷ் பேக்கை திடீரென அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் வேலுபிரபாகரன். அதுபற்றிய நமது மாற்று கருத்தை சொல்வதற்கு முன் ஜூனியர் விகடன் இதழில் அவர் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தை வாசிப்போம்.
டிசம்பர் 2, 1960... அந்த பட்டுத் துணி இன்று பத்திரமாக இருந்திருந்தால் அதன் வயது 48... ஆனால் அது 1996, செப்டம்பர் 23-ம் நாள் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிட்டதே இதோ புதிய வருடம் பிரந்த நிலையில், எனக்கும் வாழ்க்கையின் வேகங்கள் வடிந்து, தள்ளாட்டாங்கள் மெள்ள மெள்ளத் தொடங்கும். இந்த நிலையில் திரும்பிப் பார்க்கிறேன்... யாருக்கும் சொல்லாமல் எனக்குள் பூட்டி வைத்த ஒன்றைச் சொல்லிப்போக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்.
அது ஒரு காதல் காலம்...
காதலைத் தேடித்தேடி, காதலில் மூழ்கி மூச்சிரைத்துக் கொண்டிருந்த ஓர் அநாகரிக காலம்... உண்மையில், அதை 'பெண் வேட்டைக் காலம்' என்றுதான் நான் சொல்லவேண்டும்!
அப்போது எனக்கு வயது 32. பதின் மூன்றாவது வயதிலேயே பெண் தேடும் வேட்டையை இயற்கை எனக்குத் தந்தது. எந்நேரமும் காமத் தீ எனக்குள் எறிந்து கொண்டே இருந்த அந்தக் காலத்தில் இந்த சமூகமும், கலாச்சாரமும் சேர்ந்து நெய்த ஒரு காதல் போர்வையை என்னிடம் தந்தது. இறுக்கிப் போர்த்திக் கொண்டேன். அந்தப் பதின்பருவத்தில் இருந்து 32 வயது வரை எனது அந்தக் காதல் போர்வைக்குள் பெண்கள் பலர் தகதகப்பை கொடுத்துவிட்டு, பாதியில் காணாமல் போயிருந்தார்கள்!
ஆனாலும் தொடர்ந்து, அடுத்தடுத்த பெண்ணுக்குப் போர்வையைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தேன். இடையில் கிடைத்தாள் ஒரு தேவதை. அவள்மீது காதல் பிறந்தது. அது உயிருக்குயிரான என்று சொல்லும் காதலாகவும் வளர்ந்தது. அந்த பெண் யார் என்பதும், அந்தக் காதலும் இங்கு தேவையில்லை. அப்போது... அந்தப் பெண்ணையே மணந்து கொள்ள முடிவெடுத்து, அவளுக்கு கல்யாண வாக்குறுதியும், தந்துவிட்டேன். 'இதுவரை காதலித்தது போதும்... இனி குடும்பம் எனும் புதிய அத்தியாயம் தொடங்கலாம்' என்று முடிவெடுத்த வேளை அது ஆனால், அந்த நேரத்திலும் வேறு வழியே இல்லாமல் மறுபடியும் ஒரு புதிய காதலைத் தொடங்க வேண்டிய கட்டாயம் உண்டானதுதான் ஆச்சர்யம்.
ஆம். எல்லோரும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்ட ஒரு தேவதை, என் கைகெட்டும் தூரத்தில் அருகில் வந்தார். அவர்தான்... ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் உறக்கத்தை கெடுத்த ஒப்பற்ற கனவுக்கன்னி... 'சில்க ஸ்மிதா' என்னும் செல்லுலாய்ட் சிற்பம்!. தமிழ் நாட்டை மட்டுமல்ல... தென்னிந்தியாவையே 'சில்க்' என்ற கவர்ச்சி சுனாமி உலுக்கிய காலம் அது.
ஆம்! 1989-ம் வருட ஆகஸ்ட் மாதம்... சத்யராஜ்-ராதா நடித்து கே.பி.ஃபிலிம்ஸ் தயாரி்தத 'பிக்பாக்கெட்' திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக நான் ஒப்பந்தம் ஆனேன். அப்போதுதான் ஸ்மிதாவுடன் முதல் அறிமுகம்.
படம் தொடங்கிய சில நாட்களிலேயே ஒளிப்பதிவாளன்-நடிகை என்று இருந்த எங்களின் இடைவெளி கரைந்துபோனது. படம் வளர வளர ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொள்ளும் உரிமையையும் வளர்த்துக் கொண்டோம்... நெருங்கிப் பழகினோம்.
பொதுவாக, நம்முடைய கலாச்சாரத்தில் எந்தவொரு ஆணும் தன்னை நெருங்கும் எந்தப் பெண்ணையும் வீழ்த்துவதற்கே விரும்புகிறான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? வீழ்த்தும் படலம் தொடங்கியது.
ஒருநாள் சில்க்கிடம் கேட்டேன் "ஒப்பற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவின் கைவண்ணம் எதையாவது நேரில் பார்த்திருக்கிறீர்களா?" "இல்லை" என்றார் சில்க்
"உங்கள் வீட்டுக் கண்ணாடியில் உங்களை நீங்களே பாருங்கள், அந்த சிலைகளுக்கும் உங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம்... அவை உயிரற்றவை நீங்கள் உயிர் கொண்ட சிலை" என்றேன் நான்.
அவ்வளவுதான்... அகல விரிந்த அந்த போதைக் கண்களில் ஒரு மின்னல். அதுதான் அவருக்குள் காதல் தீ பற்ற வைத்த தருணம் என் காதலும்கூட சேர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தது!
'இந்த அழகுச்சிலை பார்வையற்றவர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாதே' என்பதுதான் என் அந்நேரக் கவலை. "நான் மட்டுமே சில்க்குக்குத் தகுதியானவன்" என்று எனக்குள் நானே ஓங்கி உச்சரித்துக் கொண்டேன்!
'பிக்பாக்கெட்' படப்பிடிப்பு இல்லாத ஒரு நாள் செங்கல்பட்டு பக்கத்தில் வேறு ஒரு படப்பிடிப்பிலிருந்த ஸ்மிதாவை தேடிப்போனேன் தான் சென்றதை அறிந்ததும், ஏதோ இத்தனை நேரமும் எனக்காக காத்திருந்தவர் போல ஓடிவந்தார். கண்களில் காதல் வழிய, என் கைகளைப் பற்றி இழுத்து, தன்னருகில் நெருக்கமாக அமர்த்திக் கொண்டார். அன்று அங்கே படப்பிடிப்பிலிருந்த, வேடிக்கை பார்க்கவந்த ஆயிரமாயிரம் விழிகளிலும் வியப்பு. கேள்வி... "இவனிடம் எப்படி இவருக்கு ஈர்ப்பு?" என ஆராய்ச்சியும் பொறாமையும் பொங்க... அத்தனை விழிகளும் என்னை மொய்த்தன.
ஆனால் அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. "பச்சையும் நீலமும் கலந்த உங்கள் உடை; நீங்கள் அசைந்து வந்த நளினமான நடை.... இரண்டும் சேர்ந்து பார்ப்பதற்கு ஒரு நிஜ மயிலைப் போலவே இருந்தது" என்று சில்க்கிடம் சொன்னேன், அருகிலிருந்த குளத்துத் தாமரைகள் நண்பகல் நேரத்தில் வாடியிருந்ததைச் சுட்டிக்காட்டி, "உங்கள் அளவுக்கு தாங்கள் அழகில்லையே என்று வெட்கித் தலைகுனிந்ததைப்போல இந்தத் தாமரைகள் காட்சியளிக்கின்றன" என்றேன் காதலால் உருவான கவிஞனாக!
புருவம் உயர்த்திய அவரிடம், "உங்கள் பார்வைபட்டால் மூடனும் கவிஞனாவான்" என்று பிதற்றினேன். என் பிதற்றல் அவருக்கு மேலும் பரவசத்தை ஏற்படுத்தியதை, அவர் முகம் அப்பட்டமாகக் காட்டியது.
அன்றே நான் அவருடைய எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளும் அவசரத்திலிருந்தேன். ஆனால், அவர் மீது எனக்கிருக்கும் பித்தை தவிப்பை, இன்னும் எல்லாவற்றையும் புரிய வைக்க ஐ லவ் யூ என்கிற சிறிய வார்த்தைகள் போதாது என்று அலை பாய்ந்து கொண்டிருந்தேன். என் புலன்களில் நிறைந்தி வழியும் காதலை வெளிப்படுத்த இயலாத தவிப்பைப் புரிந்துகொண்டவராக... சடாரென என் கைகளை அழுத்தமாகப் பற்றி அவரே சொல்லிவிட்டார்... "ஐ லவ் யூ?"
ஓ அவ்வளவுதான்... என் நரம்பு மண்டலத்தில் வேகமெடுத்தது ரத்த ஓட்டம். அன்றைய அகராதியில் எனக்குள் காதல் என்பது ஒரு துவக்கம்தான். அதன் வடிகால் எல்லாமே காமத்தில்தான்... வாக்குமூலம் என்று வாசகர்களிடம் கொடுக்க முடிவெடுத்த பிறகு அதையும் வெட்கத்தை விட்டு நான் சொல்வதுதானே நேர்மை. தன்னுடைய ஆசையைக் காதல் என்ற வடிவத்தில் சொல்லி ஒரு பெண்ணை வீழ்த்துவதும், அவள் மேல் இருந்த தவிப்பு தணிந்தபின்பு... அவளையும் மற்ற விஷயங்கள் போலவே சாதாரணமாக நினைப்பதும், ஆண் சமூகத்தின் பரம்பரை நோய். அதுவே எனக்கும் பொருந்தும் என்று ஆரம்பத்தில் நான் நினைக்கவில்லை.
எங்கள் காதலும் நெருக்கமும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் சென்னை ராதா கிருஷ்ணன் சாலையிலுள்ள நீல்கிரீஸ் பல்பொருள் அங்காடியில் மாலை நான்கு மணிக்கு நாங்கள் இருவரும் சந்திப்பதாக முடிவு. நான்கு மணிக்கு வந்துவிட்டார் ஸ்மிதா. நான் நான்கு ஐம்பதுக்கு தாமதமாக அங்கு போனேன். கார் பேனட்டின் மீது அமர்ந்து எனக்காக காத்துக்கொண்டிருந்த அவரைச் சுற்றி பெருங்கூட்டம்... குற்ற உணர்வோடு தலை குனிந்து அருகில் போனபோது, "இனிமேல் என்னை இப்படி காத்திருக்க வைக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்" என்று ஒரே வரியில் என் தவறை மன்னித்தார்.
அந்த கால கட்டத்தில்தான் 1990, ஜூன் மாதம் ஒருநாள் சில்க் வீட்டில் தங்கினேன். சென்னை வடபழனி பஸ்ஸ்டாண்டின் பின்புறமுள்ள குமரன் காலனியில் குடியிருந்தார் சில்க். அப்போது நள்ளிரவைத் தாண்டிய நேரம். பசி என் வயிற்றைப் பிராண்டியது. உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா? என்று சில்க் வீட்டின் குளிர்ப்பதன பெட்டியைத் திறந்து ஆராய்ந்து கொண்டிருந்தேன்... அப்போது கட்டிலில் புரண்டு படுத்த சில்க்.. என் முகத்தைப் பார்த்து... நல்ல பசியில இருக்கீங்க போல...என்று சொல்லியபடி விருட்டென எழுந்து சமையலறைக்குள் போனார். வெங்காயமும் பச்சை மிளகாயும் அரிந்து பெரும் சுவையோடு மிக நேர்த்தியாக ஒரு உப்புமா செய்து கொடுத்தார். வயிற்றில் அல்ல... என் நெஞ்சையும் நிறைத்த நீங்காத இரவு அது. எனக்கும் ஸ்மிதாவுக்குமான நெருக்கம் அதிகமானபோது... என் முந்தைய காதலிக்கு நான் கொடுத்திருந்த திருமண வாக்குறுதி, என்னைப் பெரும் குழப்பத்தில் தள்ளியது. இது யாருக்கு நாம் செய்யும் துரோகம் என்ற குழப்பம் அது அந்தக் குழப்பத்திலிருந்து எப்படி வெளியில வரப்போகிறேன் என்ற கவலை. குழப்பத்தை ஒரு குண்டு வெடிப்பாக முடித்துவைத்த அந்த நாளும் வந்தது...
ஆம்... என்னுடைய முந்தைய காதலி, எனக்கும் ஸ்மிதாவுக்குமான நெருக்கமறிந்து, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கே வந்துவிட்டாள். என் அயோக்கியத்தனத்தை எடுத்துப்போட்டு, தன் வாழ்க்கையே பணயமாக்கப்பட்டதை எடுத்துச் சொல்லி சில்க் ஸ்மிதாவிடம் அவள் சண்டை போட இப்படியொரு அருவருப்பும் சங்கடமும் நான் எதிர்கொள்ள நேரும் என்று எதிர்பாராமல் ஸ்மிதாவின் முகம் இருண்டுவிட்டது. கண்கள் இரண்டும் கலங்கிப் போயின. அவரை நிமிர்ந்து பார்க்கிற தைரியம் இல்லாமல், மன்னிப்புக் கேட்கிற பக்குவமும் இல்லாமல், மௌனமாக முழுக்கோழையாக முந்தைய காதலியைப் பின் தொடர்ந்தேன்.
'ஓ ஸ்மிதா... ஒரு சரியான பெண்ணை, தாமதமாக சந்தித்து வி்ட்டேன். என்னை மன்னித்துவிடு' என்று என் அடிமனம் அலறியதே தவிர... அதை அவரிடம் நான் சொல்லவேயில்லை
அடுத்த சில வருடங்களில், அந்த முந்தைய காதலியுடனும் சரியாக வாழாமல், 'இன்னுமொரு தேவதை, இன்னுமொரு காதல்...' என்று தேடித் தேடி, அந்தக் காதல்களும் கண்ணியமிழந்து, அர்த்தமற்றுப் போய்விட்டன.
அன்று ஸ்மிதாவே ஒருவேளை ஊரறிய எனக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்திருந்தால், அடுத்து ஒரு பெண்ணின்மேல் 'காதல்' ஏற்படுவதைத் தவிர்த்திருப்பேனா? காம நெருப்பில் நியாயங்களை எரித்துவிட்டு, அடுத்தடுத்த இடம் மாறும் அப்பட்டமான மனநோயாளியாக அல்லவா நான் அந்தக் காலத்தில் இருந்தேன்.
நான் மட்டுமல்ல... அநேகமாக இந்த சமூகத்தில் பெருமாபான்மையோர் வெளிச்சத்துக்குத் தெரியாமல், அப்படிப்பட்ட இருட்டு மனநிலையில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
இன்றைக்கு ஒரு வார்த்தை நான் சத்தியமாகச் சொல்லமுடியும்... நாற்றமெடுத்த காதல் போர்வையை இப்போது நான் போர்த்தியிருக்கவில்லை. யாருக்கும் போர்த்துவதும் இல்லை. புனிதம் சூழ்ந்த அந்த உணர்வுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை இப்போது செய்வதுமில்லை!
ஆனால், என் மனமெங்கும் படிந்துவிட்ட புண்களில் வடியும் ரத்தமும், சீழும் இன்னமும் நிற்கவில்லை என் தவறுகளுக்கு இந்த சமூகத்தை மட்டுமே முற்றிலுமாகக் குற்றம் சொன்னால், நான் கேட்கிற இந்தப் பாவமன்னிப்புக்கே அர்த்தமில்லாமல் போகும் அதில் என் பங்கே பெரும்பங்கு!
என்னைப்போனறவர்கள் யாராக இருந்தாலும் சரி... தயக்கத்திலும் காமத்திலும் காலத்தை மேலும் கடத்திவிடாமல்... அந்த பாவப் போர்வையை விலக்கி, புண்களுக்கு உடனே மருந்திட்டுக் கொள்ளுங்கள்!
ஊரறிய வேண்டாம். உங்கள் மணசறிய அதைச் செய்யுங்கள் போதும்!
வேலு பிரபாகரனின் வாக்குமூலம் இதுதான்.
இதற்கு இப்போது அவசியம் ஏற்பட்டது ஏனென்றுதான் புரியவில்லை. பொதுவாக வாழும் ஒருவரின் அந்தரங்கங்கள் பற்றி பகிர்ந்துகொள்வது அநாகரீகம். அதிலும் இறந்துபோன ஒருவரின் அந்தரங்கம் பற்றி பகிர்ந்து கொள்வது அசிங்கத்திலும் அசிங்கம். அந்த வகையில் இந்த வாக்குமூலத்தில் தானொரு அசிங்கம் என்பதை காட்டிக்கொண்டுள்ளார் காதல் அரங்கம் படத்தை எடுத்துள்ள வேலு பிரபாகரன்.
தன்மீது வேலுபிரபாகரன் சேறெடுத்தோ, சாக்கடையை அள்ளியோ பூசிக்கொள்ளட்டும் ஆனால் தன்னைப்போலவே எல்லா ஆண்களையும் எடைபோட்டு ஆண் வர்க்கத்தையே காமத்தின் குறியீடாக தனது கட்டுரையில் காட்டியிரு்பபது நியாயமற்றது. அதாவது கட்டுரையின் ஒரு இடத்தில்...
"பொதுவாக, நம்முடைய கலாச்சாரத்தில் எந்தவொரு ஆணும் தன்னை நெருங்கும் எந்தப் பெண்ணையும் வீழ்த்துவதற்கே விரும்புகிறான்". நான் மட்டும் விதிவிலக்கா என்ன? வீழ்த்தும் படலம் தொடங்கியது". என பிதற்றியுள்ள வேலு, வர்க்கம் பற்றி தர்க்கம் பேச தகுதியில்லை. ஏனெனி்ல் தானொரு மனநோயாளி என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
பல பெண்களின் தொடர்பு இருக்கையில் சில்க்கிடம் ஆசை வார்த்தைகூறி நாடகமாடி ஏமாற்றிவிட்டு காதலன் என காட்டிக்கொள்வதும் பித்தலாட்டத்தின் உச்சம்.
எனவே வேலுபிரபாகரன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் 'பாவ மன்னிப்பு' என்பதைவிட 'காம மன்னிப்பு' என்றுதான் சொல்லவேண்டும்.
|