
By: Amalan
ஆந்திர திரையரங்குகளின் கல்லாவை நிரப்பிய படம் 'வர்ஷம்'. இதன் தமிழ் உரிமையை எஸ்.பி.பி. சரண் வாங்கியபோதே இதனை இயக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ராஜ்குமார். சரணிடம் இணை இயக்குனராக இருந்த இவர் 'வர்ஷத்தை' தமிழில் 'மழை'யாக பெய்யவைத்துள்ளார். படம் ரிலீசான ரிலாக்ஸில் இருந்த ராஜ்குமாரை சந்தித்தோம்.
சிவந்த நிறம், முகத்தில் எப்போதும் பூட்டப்பட்ட கண்ணாடி என படத்தில் கதாநாயகனின் பணக்கார நண்பராக வரும் நடிகர் போல இருக்கிறார்.
முதல் படத்திலேயே ரீமேக் கதையை தேர்வு செய்தது ஏன்?
அது எனது விருப்பம் இல்லை. ஏதேச்சையாக அமைந்த விஷயம். உதவி இயக்குனரிலிருந்து இயக்குனர் பிரமோஷன் அடைய முயற்சி செய்தபோதுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக இந்த படம் ஓடியதால் அந்த நம்பிக்கையில் ஒத்துக்கொண்டேன்.
உங்களை இயக்குனராக தேர்வு செய்தது எப்படி?
என்னைப்பற்றி பலரிடமும் விசாரித்த பிறகே எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்கள். முதன் முதலில் எடிட்டர் மோகனை சந்தித்தபோது 'நீ இந்தப் படத்தை ஒழுங்காக எடுப்பாய் என்று உன்னை எப்படி நம்புவது' என்று ஒரு கேள்வி கேட்டார்.
அப்போது அவரிடம் நான் சொன்ன பதில்...
கதை சொல்லச் சொன்னால் சொல்லலாம், வசனம் கேட்டால் எழுதிக்காட்டலாம், நடிப்பு வருமா என்று கேட்டால் நடித்து காட்டலாம், இயக்க முடியுமா என்று கேட்டால் இயக்கித்தான் காட்ட முடியும். அதனால் என்னை நம்பிதான் ஆகவேண்டும் என்று சொன்னேன். எனது பதில் அவருக்கு பிடித்திருந்ததால் அடுத்த நிமிடமே நீதான் இயக்குனர் என்று சொல்லிவிட்டார்.
ரீமேக் படத்தில் நீங்கள் உங்கள் திறமையை எப்படி நிரூபிக்கமுடியும்? ஆக்ஷ்ன் கட் சொல்வதை தவிர வேறு என்ன வேலை உங்களுக்கு?
ரீமேக் என்று சாதாரணமாக சொல்கிறீர்கள். இதுபற்றி மோகன்சார் சொன்ன உதாரணம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது தண்டவாளத்தில் ரயில் ஓட்டுவது போன்ற வேலை. ரயிலை மாற்றலாமே தவிர தண்டவாளத்தை மாற்றமுடியாது. அப்படி முயற்சித்தால் அது ஆபத்தில் முடிந்துவிடும் என்பார். ஆக, ரீமேக் என்பதும் சாதாரண விஷயமில்லை.
இது ஒரு பக்கம் இருந்தால்கூட முடிந்தவரை 'வர்ஷம்' படத்தைவிட பல காட்சிகளை சேர்த்திருக்கிறேன். திருத்தியிருக்கிறேன். தமிழுக்கு ஏற்றவாறு சில சுவைகளை சேர்த்துள்ளேன். தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண், ஹீரோ ரவி, எடிட்டர் மோகன் ஆகியோர் படத்தை எடுத்து முடித்து பார்த்தபோது ரொம்ப அழகா இயக்கியிருக்கீங்க என்று பாராட்டினார்கள்.
'மழை'க்கு மொத்தம் 92 நாட்கள் செலவானது. இதில் சண்டைக்காட்சிகள் தவிர, 32 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டேன்.
உங்கள் குரு சரண் படத்தை பார்த்தாரா?
ம்... சரண் சாரும் வைரமுத்து சாரும் பார்த்துவிட்டு 'வர்ஷத்தை'விட 'மழை' எக்ஸலண்டா வந்திருக்கு என்று பாராட்டினார்கள். 'வர்ஷம்' படத்தை பார்த்தவர்களுக்கு 'மழை'யில் நான் எவ்வளவு மாற்றங்கள் செய்திருக்கிறேன் என்பது புரியும்.
க்ளைமாக்ஸில் ராவணன் கட்-அவுட் எரிந்துவிழும் காட்சியை ஒரே டேக்கில் எடுத்து முடித்தோம். அந்த காட்சியை எடுப்பதற்கு முன் ரொம்ப பயமாக இருந்தது. 62 அடி உயரமுள்ள கட்-அவுட் எரிந்து விழும்போது அதனைச் சுற்றி ஏராளமான துணை நடிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பயர் சர்வீஸையெல்லாம் வரவழைத்து அதன் பிறகு படம் பிடிக்க ஆரம்பித்தோம்.
மாட்டு வண்டியை தூக்கிக்கொண்டு ஜெயம் ரவி அடிப்பது போன்ற காட்சியெல்லாம் ஓவரா இருக்கே?
நீங்களும், ரசிகர்களும் பீல் பண்ணுவதை போலவேதான் நானும் அந்த காட்சியை எடுக்கும் முன்பு யோசித்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் இது ரொம்ப அதிகப்படியா தெரியுது. அதனால வண்டி சக்கரத்தை எடுத்து சுற்றுவது போல காட்சியை மாற்றுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் பீட்டர் ஹெய்னோ, இல்ல சார் நிஜமா அப்படி செய்யமுடியும் என்று தனி ஆளாக மாட்டுவண்டியை தூக்கி சுற்றிக்காட்டினார். நானே இதை செய்யும்போது பவர்புல் ஆளாக காட்டும் ஹீரோ ஏன் அதனை செய்யமுடியாது என்று கேட்டார். அதனால் நானும் சரியென்று விட்டுவிட்டேன். ஆனால், பயந்தபடியே ரிசல்ட் அமைந்துவிட்டது.
யார் யாரிடம் உதவியாளராக இருந்தீர்கள்?
வஸந்த் சாரிடம் 'ஆசை' படத்திலிருந்து 'ரிதம்' வரை வேலை செய்தேன். சரண் சாரிடம் 'வசூல் ராஜா' வரை இருந்திருக்கிறேன்.
சென்னைக்கு புறப்பட்டது எந்த ஊரிலிருந்து?
லாரியோ பஸ்ஸோ பிடித்து சென்னை வந்தவனில்லை நான். ஒரிஜினல் மதராஸ்க்காரன். நந்தனம் அரசு கல்லூரியில்தான் பட்டதாரியாகி வெளியே வந்தேன்.
எந்த மாதிரியான இயக்குனராக உங்களை அடையாளப்படுத்த நினைக்கிறீர்கள்?
நான் பக்கா கமர்ஷியல் இயக்குனராகவே முகம் காட்ட நினைக்கிறேன். ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருக்குமே அதுதான் சேப்டியாக இருப்பதால் கமர்ஷியல் படங்களையே தேர்வு செய்ய நினைக்கிறேன். 'மழை'யை விட்டுவிடுங்கள். அடுத்து என் மூளை உற்பத்தி செய்த சூப்பர் கதையை படம் பண்ணும்போது என்னுடைய திறமை என்ன என்பதை புரிந்துகொள்வீர்கள். இப்போதுள்ள முன்னணி இயக்குனர்கள் போல வருங்காலத்தில் என் காட்டிலும் 'மழை' பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கு.
மூக்கு கண்ணாடியை ஏற்றிவிட்டபடி, சைலண்டாக சவால் விடுகிறார் ராஜ்குமார்.
|
Feedback!
|
| |
|
|
Online Support 9 AM to 6 PM IST
|
|
|
24 Hours Phone Support
|
| 91 - 44 - 56111702
|
Send this page to your friend!
|
|
|
|