விசாகப்பட்டினத்தில் 'ஆர்யா' - ஷூட்டிங் விசிட்
Written by: APS
ஷூட்டிங் விசிட்டுக்காக இந்த முறை நாம் சென்ற ஊர் ஆந்திராவிலுள்ள அழகிய துறைமுக நகரமான விசாகப்பட்டினம் பாலசேகரன் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் 'ஆர்யா'வின் படப்பிடிப்பு நடக்கும் கலெக்டர் அலுவலகத்தை நாம் அடைந்தபோது மாதவன் பாலசேகருக்கு கேக் ஊட்டிக்கொண்டிருந்தார். பிறந்தநாள் கொண்டாடிய பாலசேகருக்கு மாதவனை தொடர்ந்து பாவனா கொஞ்சம் அதிகமாகவே கேக்கை அவரது வாயில் திணிக்க, பல வண்ண கேக் க்ரீம் அவரது வெள்ளை சட்டையில் உதிர்ந்து ஒட்டிக்கொண்டது. இதைப் பார்த்த மாதவன் குறும்பாக, "ஐயோ, நான் டைரக்டருக்கு கொஞ்சமாத் தான் கேக் கொடுத்தேன். பாவனா அளவுக்கு நான் தரலேன்னு தப்பா நினைச்சிக்கப்போறார்" என்று சொல்லி மறுபடியும் பெரிய பீஸாக கேக்கை எடுத்து விளையாட்டாக பாலசேகரன் வாயில் திணிக்க, அவர் முகம், சட்டையில் கேக் க்ரீம் வண்ணமயமாக ஒட்டிக்கொள்ள, யூனிட்டில் ஒரே கலகலப்புதான். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் படுஜாலியாக இருந்த பாலசேகரன் சிறிது நேரத்தில் முகம் கழுவி சட்டையை மாற்றிவிட்டு வந்து, மாதவன் பாவனாவுக்கு காட்சியை விளக்க ஆரம்பித்ததும் அனைவரது மூடும் ஷூட்டிங்கிற்கு மாறியது.
மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸான மாதவன், பாவனா இருவருக்குமிடையே தகராறு ஏற்படும் காட்சியை அப்போது படமாக்கினார் பாலசேகரன். தகராறு முற்றிய நிலையில், "என்னைப் பத்தி உனக்கு தெரியாது. உனக்கு வச்சுக்கறேன் பாருடா" என்று பாவனா கோபமாக கத்தியபடி அங்கிருந்து போகிறார். "நீ யாரை வேணா கூட்டிட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்" என்று பாவனாவுக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார் மாதவன்.
மாதவன் - பாவனா தகராறை எடுத்தபின் பாவனா அனுப்பிய ஆட்கள் வந்து மாதவனை தேடும் பைட் லீட் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் படத்தில் பரபரப்பாக அமையும்படி படமாக்கினார்.
6,7 டாடா சுமோக்கள் சர் சர்ரென்று வருவது, அதிலிருந்து அடியாட்கள் இறங்குவது, யார்டா இங்கு ஆர்யா என்று ஸ்டூடண்ட்ஸை மிரட்டிக்கேட்டு காலேஜ் முழுக்க மாதவனை தேடுவது, மாதவனே தானாக வந்து அவர்களை எதிர்கொள்வது என்று ஷாட்ஸ்களை செம பில்டப் ஆக அமைத்தார் ராக்கி ராஜேஷ்.
உண்மையில் கலெக்டர் ஆபீஸாக இருந்தாலும் அந்த கட்டிட வளாகம் பார்ப்பதற்கு கல்லூரி போலவே அமைந்துள்ளது. போதாதற்கு ஆங்காங்கு மெடிக்கல் காலேஜ் சம்பந்தப்பட்ட போர்டுகளும் சில செட்-அப்களும் படத்திற்காக வைக்கப்பட்டிருந்ததால் நாம் நிஜமான கல்லூரிக்குத்தான் வந்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸாக 500 ரிச் மாடல்களை வரவழைத்து நடிக்க வைத்திருந்தது வேறு இந்த எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
அதற்கு தகுந்தது போல டைரக்டர் பாலசேகரன் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை சொன்னார். "சார், இது கலெக்டர் ஆபீஸ் வளாகம். அதனால் சனி, ஞாயிறு மட்டும்தான் ஷூட்டிங் பண்றோம். ஆக்சுவலா இந்த காம்ப்ளக்ஸை மெடிக்கல் காலேஜா மாத்தற ஒரு ப்ளேன் ரொம்ப காலமா இங்க கிடப்புல இருக்கு. இந்த நிலைல நாங்க ஷூட்டிங்க்காக மெடிக்கல் காலேஜ் மாதிரி மாத்தினதும் வைசாக் முழுக்க கலெக்டர் ஆபிஸை மெடிக்கல் காலேஜா மாத்திட்டங்கன்னு ரூமர் பரவிடுச்சு. ஜனங்க கூட்டம் கூட்டமா அதை நம்பி வர ஆரம்பிச்சிட்டாங்க. இதுல எங்க ஷூட்டிங் ஒரு நாள் கேன்சல் ஆயிடுச்சு. அடுத்த நாள் பேப்பர்ல கலெக்டர் ஆபீஸ் காலேஜா மாறலன்னு கன்பார்ம் பண்ணி நியூஸ் வந்தப்புறந்தான் இந்த ரூமர் ஓஞ்சது. அது மட்டுமில்லாம காம்ப்ளக்ஸ் என்டரன்ஸ்ல கலெக்டர் ஆபிஸ்னு புதுசா ஒரு நேம் போர்டையே பெரிசா வெச்சுட்டாங்க" என்றார் பாலசேகரன்.
'ஆர்யா'வை பற்றி பாலசேகரனிடம் கேட்டபோது, 'ஆர்யா' படத்தைப் பத்தி சொல்லணும்னா இது ஒரு 'யூத்புல் யுத்தம்'. என்று சுருக்கமாக சொன்னார். "அப்ப, புல் அண்ட் புல் லவ் சப்ஜெக்டா?" என்று கேட்டதற்கு, "நோ இது ஆக்ஷ்ன் லவ். ஆக்ஷ்ன் லவ்வை யாரும் சொல்லாத கோணத்துல 'ஆர்யா'ல சொல்றேன். 'மரம் அமைதியாக இருநதாலும் காற்று அதை கலைத்துவிடும்' என்ற சேகுவராவின் கவிதைதான் 'ஆர்யா' படத்துக்கு இன்ஸ்பிரேஷன். அமைதியாக இருக்கும் ஒரு மாணவன் லைப்ல புயல் மாதிரி ஒரு பொண்ணு வர்றதால ஏற்படுற விளைவுதான் 'ஆர்யா'" என்கிறார் பாலசேகரன்.
பாவனா 'ஆர்யா' நாயகியான விவரத்தையும் சொன்னார் பாலசேகரன். "கதைப்படி நாயகி அடங்காப்பிடாரி, திமிர் பிடிச்சவ, கிட்டத்தட்ட பொம்பள ரௌடி. பாவனா ரொம்ப சாப்டான லுக் இருக்குற பொண்ணு. இந்த பவர்புல் கேரக்டரை பாவனா பண்ணமுடியுமான்னு ஒரு சந்தேகம் எனக்கு இருந்துச்சு. மேக் அப் டெஸ்ட் பண்ணி பார்த்ததும் நம்பிக்கை வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல பாவனா பண்ற பர்பாமன்ஸ்ல இப்ப 200% திருப்தி. சொல்லப்போனா இந்த கேரக்டரை பாவனா மாதிரி வேறு யாராலயும் பண்ணமுடியாதுன்னு இப்ப தோணுது. 'ஆர்யா' ரிலீசுக்கு அப்புறம் தமிழ், தெலுங்கு 2 லாங்குவேஜ்லயும் பாவனா கலக்கப்போறார் பாருங்க" என்று பாவனாவுக்கு சர்ட்டிபிகேட் தந்தார்.
'லவ் டுடே', 'துள்ளித் திரிந்த காலம்' என்று தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான படங்களை தந்த பாலசேகரன் நாகர்ஜுன், தருண், சுமன் ஆகியோருடன் இணைந்து தெலுங்கில் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு, தாய்மண்ணில் 'ஆர்யா' மூலம் செகண்ட் இன்னிங்ஸ் துவக்குகிறார். முதல் இன்னிங்ஸில் செஞ்சுரி போட்ட பாலசேகரன் செகண்ட் இன்னிங்ஸில் விட்டுவிடுவாரா என்ன!
|
Feedback!
|
|