
Written by: JBR
பதினெட்டாவது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்தன. போட்டி நிறைவுநாள் நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றதை பெரும் கொண்டாட்டத்துடன் பத்திரிகைகள் வெளியிட்டன. அதிலும் ஐஸ்வர்யாராயின் பின்புறத்தில் நான்கு பேர் கைவைத்து தூக்கிப்பிடித்த புகைப்படத்தை வெளியிடுவதில் பத்திரிகைகள் இடையே பலத்த போட்டியே நிலவியது. இந்த போட்டியில் பதக்கம் வென்றவர்கள் புறந்தள்ளப்பட்டு அமோக ஆதரவில் வாகை சூடியது ஐஸ்வர்யாராயின் பின்புறம்.
சினிமா நடிகர்கள் முதலமைச்சர்களாகும் ஒரு நாட்டில் ஐஸ்வர்யாராயின் பின்புற போஸ் முக்கியத்துவம் பெறுவது ஆச்சரியமில்லைதான்! கற்பு முதல் காவிரி பிரச்சனை வரை நடிகர்கள் ஈடுபடும்போதுதான் நம் இந்திய மீடியாக்கள் தூக்கம் விழித்தெழுகின்றன. இந்த சாபக்கேடு மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் அதன் உச்சத்தை எட்டியது.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் 2010 - ம் ஆண்டு டெல்லியில் நடைபெறுகிறது. அடுத்த காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியாவின் பாரம்பரிய இசை, நடனம் ஆகியவை போட்டி நிறைவு நாளில் இடம்பெற்றது. நம் பாரம்பரியத்தை நிலைநாட்ட இந்திய விளையாட்டுத்துறை அழைத்து வந்தவர்கள்தான் ஐஸ்வர்யாராய், ராணி முகர்ஜி, ப்ரியங்கா சோப்ரா, லாரா தத்தா மற்றும் சாயிப் அலிகான்.
மொத்தம் பதினொரு நிமிடங்கள் நடந்த இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஐஸ்வர்யாராய் இப்படி சொன்னார்: "இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட, பாரம்பரிய கலை கலாசாரத்தை வெளிக்காட்டியதில் எனக்கு சந்தோஷம்."
வியர்வை சிந்தி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் சும்மாயிருக்க மூன்று நிமிடம் நடனம் ஆடிவிட்டு, இந்தியாவின் கலாசாரத்தை காப்பாற்றியதாக பெருமையடித்துக்கொண்டார் மாஜி உலக அழகி.
இவருடன் நடனமாடிய சயீப் அலிகானுக்கும் பெருமை பிடிபடவில்லை. "எது எப்படியோ, இந்தியாவுக்கு பெருமை தரும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததே பெரிய விஷயம்தான்!"
இவர்கள் இப்படியென்றால், நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராயின் பின்புறத்தில் கைவைத்து சாமி தேர்போல் தூக்கிய காட்சியை பிரசுரித்து கலாசாரத்தை கட்டி காப்பதில் தங்கள் பணியை செவ்வனே செய்தன இந்திய பத்திரிகைகள்.
ஐஸ்வர்யாராயின் இந்த பின்புற போஸுக்கு பின்னால் மக்களின் கோடிக்கணக்கான பணம் கொள்ளை போயிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை அதுதான்!
மெல்போர்னில் பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை 'விஸ்கிராப்ட்' என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டிருந்தது. இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்த இந்நிறுவனத்தின் மூலம் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், நாற்பது கோடிகள்! ஆம், பதினொரு நிமிட கலைநிகழ்ச்சி நடத்த நாற்பது கோடிகள்!
இந்த நாற்பதில் ஐஸ்வர்யாராய்க்கு கொடுக்கப்பட்டது மட்டும் மூன்று கோடிகள். மற்றவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு கோடிவரை பட்டுவாடா செய்யப்பட்டது.
நூறுநாள்கள் கால்ஷீட் கொடுத்து இரவு பகலாக நடித்துக்கொடுக்கும் படத்திற்கு 70 முதல் 80 லட்சங்களே சம்பளமாக பெறுகிறார் ஐஸ்வர்யாராய். ஆனால், இந்திய பாரம்பரியத்தை நிலைநாட்ட, மூன்று நிமிடம் தனது பின்புறத்தை காட்ட இவருக்கு மூன்று கோடிகள்!
மெல்போர்னில் விளையாடிய மொத்த இந்திய வீரர்களுக்கும் சேர்த்து இவ்வளவு பணம் செலவிடப்பட்டதா என்பது சந்தேகமே!
அணிய நல்ல ஷூ இல்லை, உடுக்க நல்ல ட்ராக் சூட் இல்லை, சாப்பிட போஷாக்கான உணவில்லை என்று சோனியாக கிடக்கிறது இந்திய விளையாட்டுத்துறை. இப்படி 'சுதி'யிறங்கிக்கிடக்க போதிய நிதி இல்லாததே காரணம் என்று சப்பை கட்டு கட்டி வருகிறார்கள் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள். மெல்போர்னில் செலவிடப்பட்ட நாற்பது கோடி இவர்களது முகமூடியை கிழித்திருக்கிறது.
கோடிகளை ஜோபியில் போட்டுவிட்டு கலாசாரத்தை காப்பாற்றியதாக சொல்லும் நடிகைகள்தான் விளையாட்டுத்துறைக்கும் மீடியாக்களுக்கும் முக்கியமானவர்கள். அப்படியானால் விளையாட்டு வீரர்களின் கதி?
"ராணுவ பணிபுரிந்த பின் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மட்டுமே என்னால் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அமெரிக்க ஆஸ்திரேலியா அரசுகள் விளையாட்டுக்கென்று கோடிக்கணக்கில் பணம் செலவளிப்பதால் அந்த நாட்டு வீரர்களால் முழுமையாக பயிற்சி எடுத்துக்கொள்ள முடிகிறது." இப்படி தனது சொந்த செலவுகளுக்காக ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு விளையாட்டிலும் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பவர் ராஜ்ய வர்தன்சிங் ரத்தோர். மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்றவர். 2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சர்வதேச அளவில் பதக்க வேட்டையை ஆரம்பித்த இவர் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளார். இவரது நிலைமையே பார்ட் டைம் விளையாட்டு வீரராக இருக்கும்போது மற்ற வீரர்களை பற்றி குறிப்பிடத் தேவையில்லை.
கதிருக்கு பதில் பதருக்கு நீர் பாய்ச்சும் இந்த மோசடியை இதுவரை எந்த அரசியல்கட்சியும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இலவசங்களை கூவி விற்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை போலும். நாம் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான்:
இந்திய விளையாட்டுத்துறையும், மீடியாக்களும், அரசியல்வாதிகளும், ஐஸ்வர்யாராயின் பின்புறத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சம் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுங்கள்!
|
Feedback!
|
|