
Written by: JBR
தமிழ் சினிமா கதைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தாதாயிஸம் மெல்ல தமிழ் சினிமாவுக்குள்ளேயும் நுழைந்திருக்கிறது. பிரபல தாதாக்கள் பினாமி பெயரில் சினிமா தயாரிப்பதும்,கால்ஷீட் தரமறுக்கும் நட்சத்திரங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் இந்தி சினிமாவில் சகஜம்.சமீபத்தில் மகேஷ்பட்டின் அலுவலகத்தில் ரவுடிகள் துப்பாக்கி சூடு நடத்தியது பாலிவுட்டை பதறச்செய்தது.அவர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் தாதாக்களின் ஆதிக்கம் குறைவு.ஆனால், அங்கேயும் இப்படி குறைவாக இருந்த விஷக்கிருமியே இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
'நான் கடவுள்'படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று முடிவானதும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.அவற்றை தொகுத்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது பிரபல அரசியல் வார இதழ்.அந்த வார இதழில் சொல்லியிருப்பவை...
'நான் கடவுள்'படத்திற்காக தயாரிப்பாளர் தேனப்பன் பாலாவுக்கு 13 1/2 கோடிகள் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றரை கோடியை பாலா அஜித்துக்கு அட்வான்ஸாக தந்துள்ளார். படத்தில் அஜித் நடிக்கவில்லை என்றானதும் அட்வான்ஸ் குறித்து பேச தேனப்பன் மற்றும் பாலா அஜித்தை பாம்குரோவ் ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார்கள். அஜித் அங்கு சென்ற போது இவர்கள் இருவருடன் பைனான்சியர்கள் சிலரும் உடனிருந்துள்ளனர்.
படத்தில் நடிக்க தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க ஒத்துக் கொண்டிடிருக்கிறார் அஜித். ஆனால் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் தான் படம் இயக்க முடியாமல் போனதற்கு அஜித்தே காரணம் என்று கூறி அந்தப் பணத்தையும் அஜித் தரவேண்டும் என கேட்டிருக்கிறார் பாலா. உடனிருந்த பைனான்சியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் அஜித்தை திட்டி அடிக்க பாய்ந்துள்ளார். இப்படி பலமணிநேரம் அஜித்தை டார்ச்சர் செய்து இல்லாத கணக்கிற்காக பலகோடி ரூபாய்க்கு புரோ நோட்டில் அவரிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.
இது அவ்வார இதழ் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கம். இதில் வரும் பைனான்சியர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர். சினிமா தயாரிப்பாளர்களை இவர் தொடர்ந்து மிரட்டி வருவதாக ஏற்கனவே இவர்மீது புகார்கள் உள்ளன.
'அது ஒரு கனாக்காலம்'படத்தின் டைட்டிலில் தனது பேரன் பெயரையும் சேர்த்திருந்தார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் பாலுமகேந்திராவின் மீதுள்ள கோபத்தில் அந்த பெயரை டைட்டிலிலிருந்து தூக்கவே, பாலுமகேந்திராவுக்கு நியாயம் கேட்டு பாலாவும், சீமானும் தயாரிப்பாளரை தேடிச் சென்றனர். இவர்கள் இருவரும் தன்னை மிரட்டி கடத்திச் சென்றதாக பிறகு போலீசில் புகார் கொடுத்தார் தயாரிப்பாளர்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ஜி.தியாகராஜன் சில தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லையென்று அவரை அடாவடியாக மாற்றியது அதிருப்தி கோஷ்டி. இந்த மாற்றம் செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதும், தனது ரூட்டை மாற்றிய அதிருப்தி கோஷ்டி, பெப்ஸி தலைவர் விஜயன் தலைமையில், டி.ஜி.தியாகராஜனின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என மிரட்டி வலுக்கட்டாயமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்.
என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா வீரமணி பண விவகாரம் தொடர்பாக தன்னை மிரட்டியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்திக். இதே ரவுடி பிரபல இளம் நடிகரினின் மகனை கொன்று விடுவதாக மிரட்டி, தனக்கு வேண்டியவர் படத்தில் நடிக்க வைத்ததாகவும், இந்த சம்பவங்கள் அப்போது உயர் பதவியில் இருந்தவர் கவனத்துக்கு சென்றதாகவும் வீரமணி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இப்படி தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தாதாயிஸம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் தலையிட்டு இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இல்லையென்றால் பாலிவுட்டை போல இங்கும் பட்டாசுக்கு பதில் துப்பாக்கிகள் வெடிக்கும்.
இந்த சம்பவங்களையொட்டி நம் மனதில் எழும் கேள்வி:"நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் இந்த விவகாரம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறார்?"
தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் இவர் இலங்கை அகதிகள் முதல் இன்னும் விலை உயர்த்தப்படாத மண்ணெண்ணைய் வரை அனைத்திற்கும் யாரும் கேட்காமலே விளக்கம் கொடுக்கிறார். ஆனால் இவர் இருக்கும் துறையோ மிரட்டலும்,கறுப்புப்பணமும், கட்டப்பஞ்சாயத்துமாக சீரழிந்து கிடக்கிறது. இதுபற்றி குறிப்பாக அஜித் மிரட்டல் விவகாரம் குறித்து இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை விஜயகாந்த்? இத்தனைக்கும் நடிகர் சங்க தலைவர் இவர்.
சொந்தத் துறையின் களங்கம் துடைக்க முடியாதவரா தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகிறார்?
நல்ல வேடிக்கைதான் போங்கள்!
|
Feedback!
|
|