
Written by: JBR
உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் எதிர்ப்பையும் மீறி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது சோனி நிறுவன தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'தி டாவின்சி கோட்' திரைப்படம். படம் பார்த்தவர்களில் அனேகர் வழக்கமான ஹாலிவுட் திரைப்படம் என்ற கருத்தையே வெளியிட்டுள்ளனர். அப்படியானால் உலகம் முழுவதும் இது அமோக வரவேற்பை பெற என்ன காரணம்?
எழுத்தாளர் டான் பிரவுன் 'தி டாவின்சி கோட்' நாவலை எழுதிய போதும் இப்போது எழுந்தது போன்ற எதிர்ப்பும், வரவேற்பும் அன்றும் எழுந்தன. கிறிஸ்வர்களின் கடவுளான இயேசு குறித்து நாவலில் அவர் எழுதியிருந்த பைபிளுக்கு முரணான கருத்துக்களே எதிர்ப்புக்கு காரணம். இந்தக் கான்ட்ரவர்ஸியே அந்நாவல் ஏழு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகவும் காரணமாக அமைந்தது.
பைபிளில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அது எழுதப்பட்ட காலம் தொடங்கி பல விதங்களில் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. முக்கியமாக பரிணாம வளர்ச்சி தியரியை கணிடுபிடித்த விஞ்ஞானி டார்வின்! தீவிர கிறிஸ்தவரான இவர், கடவுள் மனிதனை களிமண்ணிலிருந்து உயிர்பெற வைத்தார் என்பதை நிரூபிக்க ஆராய்ச்சியில் இறங்கினார். இறுதியில் அவர் கண்டடைந்த உண்மை பைபிளுக்கு மாறாக இருந்தது. (இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ பாதிரியார்களின் கோபத்துக்கு ஆளானார் டார்வின்.)
இவரைப் போல, பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற சூரிய மையக் கொள்கையை வெளியிட்டதற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு வாடிகன் குருமார்களால் சித்திரவதை செய்யப்பட்டார் விஞ்ஞானி கலிலியோ. பல வருடங்கள் தொடர்ந்த இந்த சித்திரவதை அவரது பார்வையை பறித்து மோசமான சாவை அவருக்கு கொண்டு வந்தது. அதற்கு முன் தனது கண்டுபிடிப்புகளுக்காக கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்பு மண்டியிட்டு, பைபிளுக்கு எதிரான எனது கண்டுபிடிப்பு உண்மையில்லை என்று பகிரங்க மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் கலிலியோ.
(கலிலியோ காலத்துக்கு முன்புவரை பைபிள்படி, சூரியன் உள்பட அனைத்து கோள்களும் பூமியை மையமாக வைத்து சுற்றி வருகின்றன என்ற பூமி மையக் கொள்கையையே உண்மை என்று நம்பி வந்தனர். வருடங்கள் கடந்த பிறகு சூரிய மையக் கொள்கையை ஒப்புக்கொண்டு கலிலியோவை கொடுமைப்படுத்தியதற்கு வாடிகன் மன்னிப்பு கேட்டது தனிக்கதை.)
மேலே உள்ள நிகழ்ச்சிகள் ஒருவகை என்றால் பைபிளில் உள்ள பொருட்களை, அதில் சொல்லப்பட்டுள்ள கல்லறைகளை தேடி அலையும் ஆராய்ச்சியும் இன்னொரு புறம் தீவிரமாக நடந்துவருகிறது. கடந்த நூற்றாண்டில் சர் ஐசக் நியூட்டன், எழுத்தாளர் விக்டர் வியூகோ உள்ளிட்ட சிலர் இயேசுவின் வாரிசுகள் இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பி, அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என்ற வதந்தி இன்றும் நிலவுகிறது. 'தி லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' திரைப்படம் இயேசு கிறிஸ்து சாதாரண மனிதர்களை போல் பாலுணர்வு உள்ளவர் என்று சித்தரித்து சில ஆண்டுகள் முன் கிறிஸ்தவர்களின் கண்டனத்துக்கு ஆளானது.
இந்த வரலாறுகள், வதந்திகள், ஹாஸ்யங்கள் இவற்றின் பின்னணியில் உருவானதே டான் பிரவுனின் 'தி டாவின்சி கோட்.' துப்பறியும் கதையான இதன் ஆரம்பம் லாவுரே மியூசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸின் கொலையிலிருந்து தொடங்குகிறது. கொலை செய்யப்படும் ஜாக்குவஸ் மரணமடையும் முன் ஒரு குறிப்பையும் லாங்டன் என்ற பெயரையும் எழுதி வைக்கிறார். இதன் காரணமாக ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் மீது போலீசின் சந்தேகப்பார்வை விழுகிறது. இந்நேரத்தில் லாங்டனுக்கு உதவியாக வந்து சேர்கிறார் கொலை செய்யப்பட்ட ஜாக்குவஸின் பேத்தி சோஃபியா. இவர் லாங்டனை காப்பாற்றுவதுடன் அந்தக் குறிப்பை பயன்படுத்தி அதன் மர்மத்தை அவிழ்க்க லாங்டனுடன் தேடுதலில் இறங்குகிறார்.
இவர்கள் தேடும் அந்த ரகசியம் இயேசுவும் அவர் சீடர்களும் கலந்துகொண்ட கடைசி இரவு விருந்தில் பயன்படுத்திய ஒயின் கோப்பையை பற்றியது. இருவரின் ஆராய்ச்சியில் புனித கோப்பை என்பது கோப்பையை குறிக்கவில்லை, இரவு விருந்தில் இயேசுவின் அருகில் இருக்கும் பெண் சீடரை குறிக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். விபச்சாரி என்று ஊர் பெரிய மனிதர்களால் சாகும்வரை கல்லால் அடிக்க உத்தரவிட்டு கடைசியில் இயேசுவின் தலையீட்டால் காப்பற்றப்பட்ட மேரி மெக்தலீன்தான் அந்த பெண் சீடர் என்பது தெரியவருகிறது. ஓவியர் லியானர்டோ டாவின்சியின் புகழ் பெற்ற 'இயேசுவின் கடைசி விருந்து' ஓவியத்தில் இயேசுவின் வலதுபுறம் இருக்கும் சீடர் மீசையின்றி நீளமாக முடிவளர்த்து பெண்மை சாயலுடன் இருப்பதை தனது இந்த கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் டான் பிரவுன்.
இயேசு மேரி மெக்தலீனை மணந்தார், அவர்களுக்கு சேரா என்ற பெண்குழந்தை பிறந்தது, இயேசுவின் வம்சாவழி இன்றும் இந்த உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்பன போன்ற பைபிளில் சொல்லப்படாத பல விஷயங்களை தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிகிறது லாங்டன், சோஃபியா ஜோடி.
டான் பிரவுன் எழுதிய இந்த கற்பனை கதையை சோனி நிறுவனம் 'தி டாவின்சி கோட்' திரைப்படமாக தயாரித்திருக்கிறது. ரான் ஹோவர்டு இயக்கியிருக்கும் இப்படத்தில் லாங்டன் கதாபாத்திரத்தில் டாம் ஹங்ஸ் நடித்திருக்கிறார்.
பைபிளில் உள்ள தகவல்களுக்கு 'தி டாவின்சி கோட்' எதிராக இருப்பதாலும், பிரம்மச்சாரியான இயேசு திருமணமானவர், அவருக்கு குழந்தைகள் உண்டு என்று கூறி அவரது புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாலும் இந்தப் படத்தை புறக்கணிக்கும்படி உலக கிறிஸ்தவர்களை கேட்டுக்கொண்டுள்ளது வாடிகன்.
இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் முன்பே ரிலீஸாக வேண்டிய 'தி டாவின்சி கோட்' தாமதமாக வருகிற ஜூன் 2-ந் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது. பஞ்சாபில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
டார்வின், கலிலியோ ஆகியோரின் கண்டுபிடிப்புகளை போல் அறிவியல்பூர்வமாக இல்லாமல் ஓவியம் மற்றும் சில வதந்திகளின் அடிப்படையில் டான் பிரவுன் இந்த கதையை புனைந்திருப்பதால், அப்பட்டமாக இது கிறிஸ்தவத்துக்கு எதிரானது ஆகவே படத்தை தடை செய்யவேண்டும் என்று கூறுகின்றனர் சிலர். இது அறிவியல்பூர்வமானது அல்ல, கலாபூர்வமானது ஆகவே படத்தை தடைசெய்யக்கூடாது அது படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்று சிலர் குரல் எழுப்புகின்றனர்.
இந்த இரு கோஷ்டியினரை தாண்டி இந்தக் கதையை எதற்காக தேர்வு செய்து படமாக தயாரித்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சோனி நிறுவனத்தினரும், டான் பிரவுனும்.
இதுவரை ஆயிரம் கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது. மேலும், தகுதிக்கு மீறி விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'தி டாவின்சி கோட்' நாவலின் விற்பனை சதவீதம் இந்த சலசலப்புகளால் முப்பது சதவீதம் அதிகரித்துள்ளது. 'தி டாவின்சி கோட்' படம் மூலம் இயேசுவின் வம்சாவழினரை கண்டுபிடித்தார்களோ இல்லையோ... பணம் சம்பாதிக்கும் வழியை கச்சிதமாக தெரிந்துக் கொண்டிருக்கிறது ஹாலிவுட்!
|
Feedback!
|
|