
Written by: JBR
சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி. ராமசந்திரன், வி.என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர்களை தமிழகத்துக்கு தந்திருக்கிறது தமிழ் சினிமா. அப்படியிருக்கையில், நடிகர்களால் ஓட்டுக் கிடைக்குமா என்ற கேள்வியே அபத்தமாக தோன்றக்கூடும். ஆனால் 'விதிவிலக்குகள் பொதுவிதிகள் ஆவதில்லை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இன்றும் ஆராய வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது; 'நடிகர்களால் ஓட்டு கிடைக்குமா'? என்ற கேள்வி.
வழக்கம் போல இந்த தேர்தலிலும் கோடம்பாக்கத்தில் கூடை போடும் வேலையை பல அரசியல் கட்சிகள் அரங்கேற்றின. இதில் அதிகம் அள்ளியது அ.தி.மு.க. கட்சி. யாரும் எதிர்பார்க்காத சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகள் வீதி வீதியாக ஓட்டு சேகரித்தது தமிழக அரசியலில் கண் கொள்ளா காட்சி. இவர்களை காணவும் இவர்கள் பிரசாரத்தை கேட்கவும் போகும் இடங்களில் எல்லாம் ஜனங்கள் முண்டியடித்தார்கள். இவர்களுக்கு கூட்டம் கூடுயது சரி, ஒட்டு கிடைக்குமா?
ஆம் என்பதற்கு சான்றாக எம்.ஜி.ஆரும், இல்லை என்பதற்கு உதாரணம் காட்ட சிவாஜியும் வரலாற்று சான்றுகளாக நம்முன் உள்ளனர். இவ்விருவருமே சினிமா நடிகர்கள். கணிசமான ரசிக ஆதரவு பெற்றவர்கள். ஆனால் ஒருவர் அரசியலில் வெற்றியும் மற்றவர் தோல்வியும் தழுவினார். ஒரே பின்புலத்தில் இருந்து வந்த இருவரில் ஒருவருக்கு மட்டும் அரசியல் சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் அமைந்த பின்னணி என்ன? இந்த முரணை புரிந்து கொள்ள தமிழ் சினிமாவின் வரலாற்றை அலசிப் பார்ப்பது அவசியம்.
தமிழில் சினிமா வெளிவரத்துவங்கிய காலத்தில் மக்களுக்கு அறிமுகமான புராண கதைகளே திரைப்படமாயின. புராணங்களில் வரும் கடவுளர்கள் நாயகர்களாகவும் அசுரர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். காலப் போக்கில் புராண கதைகளின் இடத்தை சமூகக்கதைகள் கைப்பற்றின. மக்களுக்கு நல்லது செய்யும் சமூககோபம் கொண்ட இளைஞன் கடவுளர்கள் வகித்த நாயகன் இடத்தை ஆக்ரமித்தான். மக்களை துன்புறுத்தும் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தனிமனிதர்களும் அசுரர்களின் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டனர்.
இவ்வாறு சினிமா என்ற கலை ஊடகத்தை நல்லவன்-கெட்டவன், நாயகன்-வில்லன் என்ற ஒற்றைத்தன்மையுடைய கவர்ச்சிப் பொருளாக குறுக்கியதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் படங்களில் வரும் நாயகன்(எம்.ஜி.ஆர்.) சராசரி மக்கள் விரும்புகிற ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அவர்களால் சாத்தியப்படாத வீரதீர பராக்கிரம காரியங்களை செய்து மக்களை ரட்சிக்கும் வீரபுருஷனாக சித்தரிக்கப்பட்டார். இவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும், அது கலெக்டராக இருந்தாலும் சரி, கள்வனாக இருந்தாலும் சரி, மக்களை காத்துரட்சிக்கும் ஹீரோ பிம்பமே முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு கதையை தாண்டி, கதாபாத்திரத்தை மீறி எம்.ஜி.ஆர். என்ற தனி நபரின் பிம்பம் ஒரு தேவதூதனின் பிரகாசத்துடன் ஜனங்களின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுதல், நலிந்தோருக்கு ஆறுதல் என்ற எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ரட்சகன் பிம்பத்தை மேலும் பிரமாண்டமாக கட்டியெழுப்ப உதவின. இதனால் எம்.ஜி.ஆர். பொதுவாழ்க்கையில் நுழைந்த போது பெருவாரியான ஜனங்களை எளிதாக தன்வசப்படுத்த அவரால் முடிந்தது.
இந்த இடத்தில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு இயல்பான கேள்வி ஒன்று எழும். "குடிக்காதே, தர்மம் தலைகாக்கும், தாயை மதிக்க வேண்டும், உழைப்பே உயர்வு... என்பது போன்ற உயரிய கருத்துக்களை தனது படங்களின் வழியாகவும் பாடல்கள் மூலமாகவும் மக்களிடையே எம்.ஜி.ஆர் எடுத்துச் செல்லவில்லையா?" என்று, அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் இந்தக் கருத்துக்கள் ஒன்றும் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தவை அல்ல. வள்ளுவரின் காலந்தொட்டு தமிழில் புழங்கி வருபவை. மேலும், எம்.ஜி.ஆர். படங்களில் பிரசாரம் செய்யப்பட்ட இக்கருத்துக்கள் அவரது ரட்சகர் பிம்பத்தை வலுவூட்ட உதவினவே அன்றி மக்களின் அடிப்படைக் குணத்தில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையுடன் குடிக்காதே, லஞ்சம் வாங்காதே என்பன போன்ற அவர் படங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களை நடைமுறை வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். ஏறக்குறைய இக்கருத்துக்களை எம்.ஜி.ஆர் காரணமாக ஏற்றுக் கொண்டவர்கள் எவருமில்லை என்பதே உண்மை!
ஒருபுறம் இப்படி கதாநாயகன் பிம்பம் ரட்சகர் லேபிளுடன் கட்டியெழுப்பப்பட்ட நேரம், இதற்கு நேர் எதிரான சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார் சிவாஜிகணேசன். யதார்த்த வாழ்வில் எதிர்படும் சராசரி மனிதர்களின் வேடங்களே இவர் ஏற்றுக்கொண்டவை. கை இழந்தவனாக, கொலைகாரனாக, திருடனாக, அப்பராக, தியாகியாக இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களின் குணங்களை அக்குணங்களுக்குரிய சோகம், பலவீனம், கோபம், பொறாமை, களிப்பு, வீரம் என சகல அழுக்குகளுடனும் அற்புதங்களுடனும் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். எனும் நடிகரைத் தாண்டி படங்களில் வெளிப்பட்ட அவரது ரட்சகர் பிம்பம் எப்படி துதிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறாக சிவாஜியின் படங்களில் சிவாஜி என்ற நடிகன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்காக மக்களால் மதிக்கப்பட்டார்.
ஜனங்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ரட்சகன்' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர்.
இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜயகாந்த் போன்ற ஆக்ஷ்ன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.
இந்த நீண்ட விளக்கத்தின் பின்னணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட இன்றைய நட்சத்திரங்களை பார்ப்போம்.
அவ்வப்போது அப்பா வேஷம் போடும் விஜயகுமார், ஐந்து வருடங்களுக்கொரு படத்தில் நடிக்கும் முரளி, காணாமல் போன ராதாரவி, கல்யாணத்திற்கு பிறகு மவுசு இழந்த சிம்ரன், நடித்த படங்களே வெளியாகாமல் இருக்கும் விந்தியா, தெலுங்கு படங்களை மட்டும் நம்பியிருக்கும் கோவை சரளா, அம்போவான செந்தில், அரசியல் மேடைகளில் மட்டும் தலைகாட்டும் எஸ்.எஸ். சந்திரன், சந்திரசேகர், அரட்டையும் அரங்கமுமாக இருக்கும் விசு, ஒரு படத்தை பல வருடமாக எடுத்து வரும் டி.ஆர், எடுத்த படத்தை வெளியிடமுடியாமல் தவிக்கும் பாக்யராஜ்.... இவர்கள்தான் இன்று தேர்தல்களத்தை ஆக்ரமித்திருக்கிறார்கள்.
இவர்கள் யாரும் எம்.ஜி.ஆர். போன்று மக்களை கவர்ந்த ஆக்ஷ்ன் ஹீரோக்கள் அல்ல. சிவாஜி போன்று பெரும் ரசிகர்களை சம்பாதித்தவர்களும் அல்ல. அப்படியிருக்க இவர்களால் கூட்டத்திற்கு இரண்டு ஓட்டு பிடிக்கவே முடியாது என்பதே உண்மை. சாதி பின்புலத்துடன் வளையவரும் ஆக்ஷ்ன் ஹீரோ சரத்குமாரின் நிலைமையும் எந்த வகையிலும் இவர்களுக்கு மேம்பட்டது அல்ல. பிரபல பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
எம்.ஜி.ஆர். வளர்த்து விட்ட ரட்சகர் பிம்பத்தை ஜனங்கள் மெல்ல உதறத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. உதாரணமாக சமீபத்திய இரண்டு திரைப்படங்களை கூறலாம். 'சித்திரம் பேசுதடி' படத்தின் நாயகன் வழக்கமான நாயகனுக்குரிய லட்சணங்கள் ஏதுமில்லாதவன். குடிகாரன், காசுக்கு ஆட்களை உதைப்பவன். முக்கியமாக பொது ஜனத்துக்காக எந்த புரட்சியும் செய்யாதவன். 'திருட்டு பயலே'படத்தின் ஹீரோ கிட்டத்தட்ட புராணகாலத்து அசுரனை போன்றவன். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களே சமீபத்தில் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன.
இதற்கு மாறாக 'ரட்சகர்' லேபிளுடன் வந்த 'ஆதி','திருப்பதி' போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. அழுக்கும் அற்புதங்களும் ஒருசேர கலந்த யதார்த்த நாயகனையே ஜனங்கள் விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்ட 'கதை'நாயகன்கள் அதிகரிக்கும் போது 'ரீல்'ஹீரோக்கள் அரசியலில் ரியல் ஹீரோக்களாக மாறும் அபத்தம் தமிழகத்தில் குறையும்!
|
Feedback!
|
|