
Written by: JBR
நடிகர் ஜெய்சங்கரின் கௌபாய்ரக படங்கள் பார்த்திருக்கிறீர்களா? அனேகமாக அவ்வகை படங்களில் ஜெய்சங்கரின் தாய் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பார்கள். தங்கை கற்பழிக்கப்பட்டிருப்பாள். வில்லனை பழிவாங்க காடு மலை என்று அலைந்து கொண்டிருப்பார் ஜெய்சங்கர். அனேகமாக அவருக்கு வில்லனைப் பற்றிய துப்புக் கிடைக்கும் இடம் ஒரு ஹோட்டலாக இருக்கும். ஒரு கூல்டிரிங்ஸை ஆர்டர் செய்து ஸ்ட்ராவை வாயில் வைத்ததும் டிரம்ஸ் ஒலிக்கத் துவங்கும். கலர் விளக்குகள் பளிச்சிடும். கொசு வண்டியிலிருந்து வருவதுபோல் புகை கிளம்ப, ஜிகினா உடையில் காபரே டான்ஸர் தரிசனம் தருவார். கரடுமுரடான பாடலுக்கேற்ப உடலை வெட்டி ஆடியபடி ஜெய்சங்கரின் கழுத்தை கட்டிக் கொள்வார். சில நேரம் டான்ஸரின் சின்ன பிரா இடுக்கிலிருந்து வெளிப்படும் குட்டி காகிதத்தில் வில்லனைப் பற்றிய விவரம் ஜெய்சங்கருக்கு தெரிவிக்கப்படும். அல்லது பாடல் முடியவும் வில்லனின் ஆள்கள் மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்ய, துப்பாக்கிச் சண்டை துவங்கும்.
எப்படியோ, நடனம் முடியும்வரை மட்டும் எந்த இடையூறும் ஏற்படுவதில்லை.
கவர்ச்சிக்காவே வைக்கப்படும் இந்த தனிநடனங்கள் எழுபதுகளில் பிரபலமாகயிருந்தன. இந்த நடனங்களுக்கென்றே பிரத்யேகமான நடிகைகள் இருந்தனர்.
பாடல்காட்சிகளுக்கென்றே சிகரெட்கள் வாங்கிச்செல்லும் ரசிகர்களை, பாடலுக்காகவே தியேட்டருக்கு வரவழைத்த பெருமை இந்த கிளப் நடனங்களுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் உண்டு.
டி.ஏ. மதுரம், வி.என். ஜானகி, தேவிகா, பானுமதி, பத்மினி என பதினாறுகெஜ புடவையில் படுத்திக்கொண்டிருந்த காலத்தில் ரசிகர்களை ரிலாக்ஸாக விசிலடிக்க வைத்தவர் ஜோதிலட்சுமி. சின்ன பிரா, இடுப்புக்கு கீழே அபாயகரமான இடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் குட்டை பாவாடை, பாதத்திலிருந்து மேல் நோக்கி வைக்கும் கேமரா கோணம்... ஜோதிலட்சுமியின் ஜோதியில் ரசிகர்கள் ஐக்கியமாக அதிகப்படங்கள் தேவைப்படவில்லை.
இவருக்கு அடுத்தப்படியாக இந்த வகை கவர்ச்சி நடனங்களில் கலக்கியவர் ஜெயமாலினி. ஜோதிலட்சுமியின் தங்கையான இவர் அறிமுகமானது 'ஜெகன் மோகினி' படத்தில் நாயகியாக. பெயர்தான் நாயகியே தவிர இவருக்கு படம் முழுவதும் கவர்ச்சி நடிகைக்கு உரிய உடையே கொடுக்கப்பட்டது. அதனாலேயே கதாநாயகி வாய்ப்புகள் ஏதும் வராமல், அக்காவைப் போலவே ஒரு பாடலுக்கு ஆடத்தொடங்கினார் ஜெயமாலினி. இவரது கவர்ச்சி ஆட்டம் எட்டுவருடங்கள் நீடித்தது.
இந்த காலக்கட்டத்தில் கவர்ச்சிப்பிரதேசத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை உருவாக்கி கதாநாயகிகளையே கலங்கடித்தார் ஒரு நடிகை. மயக்கும் விழியும், பனிக்கும் உதடுகளுமாக கவர்ச்சிக்கு தனி இலக்கணம் எழுதிய சில்க் ஸ்மிதாதான் அது. ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் 'அன்று பெய்த மழையில்' படம் வெளிவந்தபின், பெரும்பாலான இளைஞர்கள் சில்க் நடித்த படத்தைப் பார்த்து, அவரை கனவு கண்டு, அவர் கடித்த ஆப்பிளை ஏலத்தில் எடுத்து சில்க் மயமாகவே மாறிப்போயினர்.
இவர் ஏற்படுத்திய புரட்சியில் பூத்த புது மலர்கள் என்று அனுராதா, பபிதா, குயிலி, டிஸ்கோ சாந்தி ஆகியோரை சொல்லலாம். ஆயினும் இவர்களின் பொற்காலம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இளைய தலைமுறை இயக்குனர்கள் கிளப் நடனங்களுக்கு மொத்தமாக சங்கு ஊதியது ஒரு காரணம். இரண்டாவது, குளோபலைசேஷன் குளறுபடியால் கதாநாயகிகளே கவர்ச்சி நடிகைகளின் தரத்திற்கு ஆடத்தொடங்கினர். ஒரு பாடலுக்கு ஆடவும் கதாநாயகிகள் தயாராகவே, கவர்ச்சி நடிகைகளுக்கான கதவு சினிமாவில் நிரந்தரமாக மூடப்பட்டது.
குஷ்பூ கதாநாயகியாக உச்சத்தில் இருந்த நேரம், 'இந்து' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். சிம்ரன் 'யூத்', 'தயா', 'அந்தப்புரம்' உள்பட பல படங்களுக்கு ஆடி, ஒரு நடனத்திற்கு மட்டும் ஆடுவதற்கு கதாநாயகிகளிடமிருந்த கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் இல்லாமல் செய்தார். இயக்குனர்களும், இப்படி பெரிய நடிகைகளை ஆடவிடுவதன் மூலம் தங்கள் பாடலின் தரம் உயர்வதாக நம்பினர். விளைவு? மும்பையின் பெரிய பெரிய ஸ்டார்கள் இன்று பழைய கவர்ச்சி நடிகைகளின் இடத்தை ஆக்ரமித்துள்ளனர்.
சுஷ்மிதா சென், ஷில்பா ஷெட்டி போன்ற நாயகிகளில் இருந்து யானா குப்தா, லிண்டா, ரகஸியா போன்ற கவர்ச்சி நடிகைகள் வரை அனைவரையும் தமிழ் சினிமாவில் தாராளமாக பார்க்கக் கிடைக்கிறது.
இவர்களது வரவால் இன்னாள் ஜோதிலட்சுமியும், ஜெயமாலினிகளுமான அல்போன்சா, பாபிலோனா, அபிநயஸ்ரீ போன்றவர்கள் வேறு மாநிலங்களில் வாய்ப்பு தேடிவருகிறார்கள்.
உள்ளூர் நடிகைகளுக்கு கொடுப்பதைவிட மும்பை வரவுகளான ரகஸியா போன்றவர்களுக்கு ஐந்து மடங்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் நட்சத்திர ஹோட்டல் செலவு, விமான டிக்கெட் செலவுகள் தனி. இருந்தும் படத்தின் 'ரிச்'னெஸ்சுக்காக மும்பை வரவுகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இது இப்படியென்றால், காலாவதியான முன்னாள் நாயகிகள் காசு பார்க்கவும், தங்கள் கலைப் பயணத்தை புதுப்பிக்கவும் கண்டு பிடித்திருக்கும் குறுக்குவழி, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது.
விந்தியா 'ஆசை ஆசையாய்' படத்திலும், மும்தாஜ் 'ரோஜாக்கூட்டம்' உள்பட பல படங்களிலும், ரம்பா 'சுக்ரன்', 'அழகிய தீயே', 'சத்ரபதி' படங்களிலும், கிரண் 'அரசு', 'சின்னா'விலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர்.
இவர்களின் இந்த அதிரடியால் பழைய ஜோதிலட்சுமிகளின் வம்சம் வாய்ப்பின்றி ஏறக்குறைய இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கிற வண்டர்குழலிகளுக்கும், அபிநயஸ்ரீகளுக்கும் ஆடிக்கொருமுறை தீனி கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது.
கவர்ச்சி நடனம் இப்படி கைமாறி செல்வதற்குப் பதில் ஒரேயடியாக காணாமல் போனால் தமிழ் சினிமாவின் தரம் அரை இன்சாவது அதிகமாகும்.
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கவனிப்பார்களா?
|
Feedback!
|
|