
Written by: JBR
ஒரு மாதம் உலகை ஆட்டி வைக்கப்போகும் கால்பந்து போர் இன்று தொடங்குகிறது. கால்பந்து அதிகம் விளையாடப்படும் ஐரோப்பியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கால்பந்து விளையாட்டு அல்ல. அது ஒரு மதம். அதை ஆடுகிறவர்களே அவர்களின் கடவுளர்கள். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியே அவர்களுக்கு திருவிழா!
ஜெர்மனி - கோஸ்ட ரிகா மோதும் முதல் போட்டியுடன் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 9.30-க்கு துவங்கும் இந்தப் போட்டிக்காக ஜெர்மனியின் முனிச் நகரில் பிரத்யேகமான ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் செலவில் தயாராகியிருக்கும் இந்த ஸ்டேடியத்தில் 66,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் கால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாக நம்பப்படுகிறது. இறகுகளால் ஆன பந்தை உதைத்து விளையாடும் சீனாவின் பாரம்பரிய விளையாட்டு இந்த நம்பிக்கையை உறுதி செய்கிறது. பிறகு இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்த இந்த விளையாட்டு, 1904-ல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான 'பிபா' உருவானதை தொடர்ந்து உலக மக்களின் மனங்களை கவரத் தொடங்கியது. 1930-ம் ஆண்டு உருகுவேயில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டியுடன், வானுக்கு கீழ் நடக்கும் மிகப்பெரிய 'ஈவென்ட்' எனும் பெருமையுடன் உலக மக்களின் ஒரே விருப்பமாக மாறியது இவ்விளையாட்டு!
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் நடைபெறாமல் போன உலக கோப்பை போட்டி பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு 1950-ல் நடைபெற்றது. இந்தியா கலந்து கொண்ட ஒரே உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவே. அப்போது இந்திய வீரர்கள் ஷூ அணிந்து விளையாடும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. வெறுங்காலுடன் விளையாட 'பிபா' அனுமதிக்காததால் போட்டியில் கலந்துகொள்ளாமலே பரிதாபமாக இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.
அன்றைய தோல்வி இன்றுவரை தொடர்கிறது. தரவரிசை பட்டியலில் முதல் நூறு இடங்களில் இந்தியா இல்லை. இதனாலேயே இந்தியாவில் கால்பந்து மீதான ஈடுபாடு மிகக்குறைவாக உள்ளது. விதிவிலக்கு மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்கள். ஆச்சரியப்படும் விதத்தில் இவ்விரு மாநிலங்களிலும் அதிக அளவில் தீவிர கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். தொலை தொடர்பு வளர்ச்சியானது தற்போது இந்தியா முழுக்க கால்பந்து மீதான மோகத்தை வளர்த்தெடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
2002-ம் வருடம் இந்தியரான குரிந்தர் சத்தா தயாரித்து இயக்கிய 'பென்ட் இட் லைக் பெக்காம்' திரைப்படமே இதற்கு சான்று. இங்கிலாந்தில் குடியேறும் இந்திய குடும்பம் ஒன்றின் இளம் பெண் ஒருத்தி இங்கிலாந்து கேப்டன் டேவிட் பெக்காம் போல் (மகளிர்) கால்பந்தில் புகழ்பெற விரும்புகிறாள். அவளது குடும்பம் அதற்கு தடை விதிக்கிறது. கால்பந்து விளையாட்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று க்ராஸ் ஓவர் படங்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி தந்தது.
உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியையொட்டி சினிமாவின் சீசன் வியாபாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர். இந்தியில் மட்டும் இவ்விளையாட்டு பின்னணியில் மூன்று படங்கள் தயாராகின்றன.
யாஷ் சோப்ராவின் 'சக் டே' திரைப்படத்தில் மகளிர் கால்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக ஷாருக்கான் நடிக்கிறார். இதே போன்றதொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் இன்னொருவர் நானா படேகர். படம் 'யஹான் கே ஹம் சிக்கந்தர்'. இயக்கம் அகமது கான். இதில் கால்பந்தாட்ட வீரராக வருகிறார் விவேக் ஓபராய்.
இவை தவிர விவேக் அக்னி ஹோத்தியின் புதியபடமும் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தியே தயாராகிறது.
கிரிக்கெட்டைவிட மலையாளிகளுக்கு விருப்பமான விளையாட்டு கால்பந்து. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயனின் மீது மலையாளிகளுக்கு ஒரு ஹீரோ இமேஜ் இன்றும் உள்ளது. இயக்குனர் ஜெயராஜ் விஜயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கியது இந்த மரியாதையின் தொடர்ச்சியே!
மோகன்லால் நடிக்கும் 'மகா சமுத்திரம்' திரைப்படம் தற்போது ஷூட்டிங்கில் உள்ளது. கேரளாவின் கால்பந்து ஜுரம் 'மகா சமுத்திரத்தை'யும் விட்டுவைக்கவில்லை. இரண்டு நாள் முன்பு திருவனந்தபுரம் சந்திரசேகர் நாயர் ஸ்டேடியத்தில் சாக்கர் ட்ரெஸ்ஸில் களமிறங்கிய மோகன்லாலை வைத்து சில காட்சிகளை கதைக்கு சம்பந்தமேயில்லாமல் படம் பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஜனார்த்தனன். இந்த கால்பந்து விளையாட்டில் மோகன்லாலுடன் உடன் விளையாடியவர் முனனாள் கால்பந்து கேப்டன் விஜயன். இந்தக் காட்சி 'மகா சமுத்திரத்தில்' இடம்பெறுகிறது.
இதே போன்று கலாபவன் மணி மூன்று வேடங்களில் நடிக்கும் 'சாக்கோ ரெண்டாமன்' படத்திலும் கால்பந்து முக்கிய இடம் வகிக்கிறது. கலாபவன் மணியின் மூன்று வேடங்களில் முக்கியமான கேரக்டர் ஒரு புட்பால் ப்ளேயர். படம் நெடுக புட்பால் போட்டி இடம்பெறும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக கோப்பை விளையாட்டில் கால்பந்து அளவுக்கு பேசப்படும் இன்னொரு விஷயம், இப்போட்டி தொடங்கயிருக்கும் ஜெர்மனியின் முனிச் நகரம். 1974-ல் இங்கு நடந்த இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது மேற்கு ஜெர்மனி. (அப்போது ஜெர்மனி கிழக்கு, மேற்கு என பிரிந்திருந்தது. இரு ஜெர்மனிகளும் இணைந்தபின் ஒருங்கிணைந்த ஜெர்மனி கலந்து கொள்ளும் முதல் போட்டி இது.) 1972-ல் முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடந்தவேளை பதினொரு இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கிய இந்த கொலைகள் இன்றும் விளையாட்டு துறையின் மாறா வடுவாக உள்ளது. அமெரிக்கா ஆப்கான், ஈராக் நாடுகளின் மீது அத்துமீறியதை தொடர்ந்து 1972-ல் முனிச்சில் நடந்த கறுப்பு சம்பவம் இந்த முறை அமெரிக்க வீரர்களின் மீது ஏவி விடப்படாலம் என்ற பயம் அனைவரின் மனதிலும் உள்ளது. இதனால் உண்மையிலேயே வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெர்மனி அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஜெர்மனி பாதுகாப்பு படையினர், நோட்டா, இன்டர்போல் இவர்களுடன் 'பிபா' சார்பிலும் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி அனைவரையும் ஆட்டிப் படைக்கும் முனிச் பீவரை சாதகமாக்கி, 1972 முனிச் படுகொலையை தொடர்ந்து இஸ்ரேல் அரசு எடுத்த கடுமையான கொலையாளி வேட்டையை 'முனிச்' என்ற பெயரில் திரைப்படமாக்கியிருக்கிறார் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் எந்த விருதும் பெறவில்லை என்றாலும், முனிச் கால்பந்து போட்டியின் தயவால், தியேட்டர்களில் நல்ல கூட்டத்தை பெற்று வருகிறது.
ஹாலிவுட், இந்தி, மலையாளம் சினிமாக்கள் சரி. தமிழ்?
நம்மூர் ஹீரோக்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிப்பதிலும், தனி ஆளாக தமிழக தாதாக்களை ஒழிப்பதிலும், குத்து பாடலிலும் பிஸியாக இருப்பதால் இன்னும் பத்து வருடங்களுக்கு கால்பந்து விளையாட்டை டி.வி. யில் மட்டுமே தமிழர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் கால்பந்து தப்பித்தது என்றுதான் சொல்லவேண்டும்!
|
Feedback!
|
|