
Written by: JBR
"You ain't heard nothing yet"
1927-ல் வெளியான வார்னர் பிரதர்ஸின் 'தி ஜாஸ் ஸிங்கர்' படத்தில் நடிகர் அல்கோல்சன் பேசிய இந்த வரிதான் உலக சினிமாவின் முதல் குரல்! இதற்கு நான்கு வருடங்கள் கழித்து 1931-ல் தமிழ்சினிமா தனது பலவருட மௌனத்தை களைந்து பேசத்துவங்கியது. முதல்படம் H.M. ரெட்டியின் 'காளிதாஸ்'. ஆக, 1931-ல் பேசத்துவங்கிய தமிழ்சினிமா தனது 75-வயது கொண்டாட்டத்தை துவக்கியிருக்கும் தருணம் இது.
இந்த நேரத்தில் தமிழ்சினிமா- குறிப்பாக அதன் குரல் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பார்ப்பது சாலப்பொருந்தும்.
மௌனப்படங்கள் காலத்தில் சினிமாவுக்கு மொழி கொடுத்தவர்கள் 'டாக்கி'கள். படம் திரையிடப்படும்பொழுது இந்த டாக்கிகள் திரை அருகில் நின்று உரத்த குரலில் காட்சிகளை அதன் செய்திகளை கதையின் பின்புலத்தை விளக்குவார்கள்.
உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட இந்தமுறைதான் தமிழிலிலும் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் 1926-ம் ஆண்டு ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ விட்டாபோன் முறையை அமுல்படுத்தியது. உரையாடல்கள் பெரிய தகடுகளில் (Discs) பதிவு செய்து பின்பு அவை திரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தப்படுவதே விட்டாபோன் முறை. படப்பிடிப்பின்போதே மைக்கின் உதவியுடன் உரையாடல்களும், இசையும் பதிவு செய்யப்பட்டன. தமிழின் முதல் பேசும்படம் 'காளிதாஸ்' இந்த முறையில்தான் உருவாக்கப்பட்டது.
1931-ல் விட்டாபோன் முறை வழக்கொழிந்தது. லீ டீ பாரஸ்ட் என்ற அமெரிக்கர் ஒலியை நேரடியாக பிலிமில் பதிவு செய்யும் 'மூவிடோன்' முறையை இந்த வருடத்தில்தான் கண்டுபிடித்தார்.
'மூவிடோன்'னின் அடுத்தக்கட்ட வளர்ச்சி DAT டெக்னாலஜி. இது எட்டு ட்ராக்குகளை கொண்டது. ஒலி மிக துல்லியமாக DAT முறையில் பதிவு செய்யப்பட்டது.
பிறகு DAT, 2DAT-ஆக வளர்ச்சியடைந்தது. இதில் மொத்தம் பதினாறு ட்ராக்குகள். சினிமாவில் குரலை துல்லியப்படுத்த 2DAT டெக்னாலஜி பெரிதும் உதவியது. Computerised Unlimited Track Technology விரைவில் திரைப்படங்களில் பயன்படுத்தப்படவுள்ளது. இது உபயோகத்துக்கு வரும்போது சினிமா ஒலி தனது உச்சபட்ச துல்லியத்தை எட்டும். ஒலியை பதிவு செய்வதில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியுடன் சேர்ந்து ஒலியின் quality-யும் முன்னேற்றமடைந்தது.
ஆரம்பகாலக்கட்டத்தில் Mono-வாக இருந்த ஒலியின் தரம் டால்பி, டி.டி.எஸ். என்று குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை எட்டியது. Mono-வுக்கும் டால்பி, டி.டி.எஸ்.க்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் Base Frequency. சரவுண்ட் சிஸ்டம் எனப்படும் DTS - ஒலி அமைப்பில் மூன்று சி.டி.க்களில் ஒலி பதிவு செய்யப்பட்டு திரைப்படத்துடன் ஓடவிடப்படும். சி.டி.க்களில் உள்ள code-ஐ புரொஜக்டர் read செய்தவுடன் System வேலை செய்யதுவங்கும்.
இந்தியாவிலேயே முதன்முதலில் டால்பி ஒலி அமைப்பில் தயாரான படம் கமலின் 'குருதிப்புனல்'. அது போல் DTS ஒலி அமைப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆபாவாணனின் 'கறுப்பு ரோஜா' படம். சினிமா ஒலி தொழில்நுட்பத்தில் தமிழ்சினிமவின் பங்கை விளக்கும் எளிய உதாரணங்கள் இவ்விரு திரைப்படங்கள்.
DTS-க்குஅடுத்தபடியாக SBBS என்ற ஹைடெக் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹாலிவுட்டில் இது அறிமுகமான சில வருடங்களில் தமிழ்சினிமா இதனை சுவீகரித்துக்கொள்ளும் என்று நம்பலாம்.
லீ டி பாரஸ்ட் கண்டுபிடித்த மூவிடோன் முறையில் பிலிமின் ஒரு ஓரம் சவுண்ட் ட்ராக் இடம்பெற்றது. தற்போது அறிமுகமாகியுள்ள சூப்பர் 35 எம்.எம். தொழில் நுட்பத்தில் சவுண்டுக்கு என தனி ட்ராக் ஏதுமின்றி பிலிமிலேயே இமேஜுடன் சேர்த்து ஒலி பதிவு செய்யப்படுகிறது.
இதனால் பிலிம் இமேஜ் மட்டுமின்றி ஒலியும் அதன் உச்சபட்ச துல்லியத்தை எட்டமுடியும். செல்வராகவனின் 'புதுப்பேட்டை' மற்றும் கமலின் 'வேட்டையாடு விளையாடு' படங்கள் சூப்பர் 35 எம்.எம்.பிலிமில் தயாராகின்றன.
ரெக்கார்டிங் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ஹாலிவுட் சினிமாவுக்கான இசையை தன் சொந்த ஸ்டுடியோவிலேயே பதிவு செய்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். அவரது ஸ்டுடியோவை போலவே பல ஹைடெக் ரெக்கார்டிங் தியேட்டர்களை தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு.
கதை திரைக்கதையில் உலகதரத்தில் ஒரு சினிமா தமிழில் உள்ளதா என்ற கேள்விக்கான பதில் தடுமாற்றத்துடன் வெளிவரலாம். ஆனால் ஒலி தொழில் நுட்பத்தில் உலகதரத்துக்கு இணையான வளர்ச்சியை அடைந்திருக்கிறது தமிழ்சினிமா.
ஐந்து முதல்வர்கள் ஐயாயிரத்து ஐநூறுக்கும் மேல் திரைப்படங்கள் அளவிடமுடியாத மக்கள் நாயகர்கள்... தமிழ்சினிமாவின் இந்த 75 வருட சாதனைகளுடன் அதன் 'குரலை'யும் நாம் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்!
|
Feedback!
|
|