
Written by: JBR
உலக திரைப்பட வரிசையில் மற்ற எல்லா நாடுகளையும் பின்தள்ளி முதலிடத்தை பிடிக்கிறது ஈரானிய சினிமா. 1979-ல் இங்கு நடந்த இஸ்லாமிய புரட்சி கடுமையான தணிக்கை முறையை அமுல்படுத்தி ஈரானிய சினிமா வளர்ச்சியை அடியோடு தகர்த்தது. 200- க்கு மேற்பட்ட திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டன. 1987-க்கு பிறகே ஈரானிய சினிமா சிறிது மூச்சுவிட அனுமதிக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பண்பாட்டுதுறை பல புதிய விதமுறைகளை உருவாக்கியது. இந்த சுதந்திர பின்னணியில் உருவான மசூத் கிமியாய், நாசர் டக்வாய், அப்பாஸ் கிராஸ்தமி ஆகிய இயக்குனர்கள் உலகத் தரமான திரைப்படங்களை இயக்கினர். இவர்களின் தாக்கத்தில் பல புதிய இளம் இயக்குனர்கள் ஈரானிய சினிமாவுக்கு வளம் சேர்த்தனர். அவர்களில் முக்கியமானவர் மஜித் மஜிதி. (Majid majidi)
எண்பதுகளில் ஈரானிய சினிமா சர்வதேச அளவில் எண்பதுக்கு மேற்பட்ட விருதுகளை வென்றது. இரண்டாயிரத்தில் இந்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்தது. ஈரானிய சினிமாவின் முக்கியத்துவத்தையும் உலகத் தரத்தையும் அறிந்துகொள்ள இந்த புள்ளிவிவரம், ஒரு சோறு பதம்!
1997-ல் வெளியான மஜித் மஜிதி இயக்கிய 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' (Children of heaven) ஈரானிய திரைப்படங்களின்பால் உலக திரைப்பட ஆர்வலர்களை ஈர்த்த படங்களில் முக்கியமானது. இத்திரைப்படம் ஏற்படுத்திய வைபிரேஷன் மூன்று நாள்களுக்கும் மேல் நீடித்தது என்று கூறியிருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.சி. ஸ்ரீராம். தனக்குப் பிடித்த பத்து படங்களின் பட்டியலில் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தையும் சேர்த்திருக்கிறார் பாலுமகேந்திரா. 1997 மான்ட்ரில் உலக திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை தனதாக்கியது இப்படம்.
உலக அளவில் விருதுகளையும், ரசிகர்களையும் சம்பாதித்த இப்படத்தின் கதை அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும் ஒரு சிறுமியையும் பற்றியது.
அலி என்ற சிறுவன் தனது தங்கை ஜாராவின் கிழிந்த ஷூக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குச் செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களுக்கு அருகில் ஷூவை வைக்கிறான். அலி பொருட்கள் வாங்கும் நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச்செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் ஷூவை எடுத்துச்சொல்கிறான்.
ஷூ தொலைந்த விபரத்தை தந்தையிடம் சொல்லப்போவதாக அலியிடம் கூறுகிறாள் ஜாரா. அவளை தடுக்கிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாள்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலை இல்லாதவர். வீட்டு சொந்தக்காரருக்கு ஐந்துமாத வாடகை பாக்கி வைத்திருப்பவர்.
இந்நிலையில் அண்ணனும் தங்கையும் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். அதன்படி அலியின் ஷூவை அணிந்து ஜாரா காலையில் பள்ளிக்கு செல்வது. அலிக்கு மதியத்திற்கு மேல்தான் பள்ளிக்கூடம். அதனால் ஜாரா பள்ளிவிட்டு வந்தபின் அவளிடமிருந்து ஷூவை அணிந்து சென்றால் பிரச்சனையை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலும் அவரது கோபத்திற்கு ஆளாகாமலும் தப்பிக்கலாம்.
தனக்கு பொருந்தாத அண்ணனின் ஷூவை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான ஷூக்கள் அவள் மனதில் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை உருவாக்குகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் அவள் பள்ளி முடிந்ததும் தெருவில் காத்திருக்கும் தனது அண்ணனுக்கு ஷூவை கொடுக்க குறுகலான தெருக்கள் வழி ஓட வேண்டியிருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும் வகுப்பு துவங்கிய பிறகே அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி ஒருமுறை வகுப்பில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்துவரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியர் அலிக்காக தலைமையாசிரியரிடம் பரிந்துரை செய்வதை தொடர்ந்து அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.
இதனிடையில் தனது தொலைந்த போன ஷூவை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை கண்டுபிடிக்கிறாள் ஜாரா. தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின் தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அச்சிறுமியின் தந்தை ஒரு பார்வையற்றவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் எதுவும் பேசாமல் வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அலியும் தேர்வாகிறான். போட்டியில் மூன்றாவதாக வருகிறவர்களுக்கு ஷூ பரிசளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே அலி போட்டியில் கலந்துகொள்ள காரணம். தனக்கு கிடைக்கும் ஷூவை தங்கைக்கு கொடுத்து விடுவதாக ஜாராவிடம் கூறுகிறான்.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் வருகிறது. போட்டியில் அலி ஓடும்போது, ஷூவை கொடுக்க பள்ளியிலிருந்து ஓடிவரும் ஜாராவின் காலடி சத்தம் பின்னணியில் ஒலிக்கிறது. கூடவை ஷூ தொடர்பான அலி, ஜாராவின் உரையாடல்கள். இறுதியில் அலி எதிர்பார்த்த மூன்றாவது இடத்திற்கு பதில் முதல் ஆளாக வெற்றிக்கோட்டை எட்டுகிறான். ஷூ பரிசு கை நழுவிப் போகிறது.
ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான் அலி. முற்றத்தில் தண்ணீர் தொட்டி அருகில் நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவள் முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, உள்ளே செல்கிறாள்.
அலியின் ஷூ இப்போது நைந்து கிழிந்துபோயிருக்கிறது. தொட்டியின் அருகில் அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப்பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. ஏமாற்றமும், வலியும், வருத்தமும் ஒருசேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் கால்களை தங்கநிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.
எளிமையாக, ஒரு சிறுகதைக்குரிய கச்சிதத்துடன், கவிதைக்குரிய கவித்துவத்துடன் மஜித் மஜிதியின் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' பார்வையாளர்களை கொள்ளை கொள்கிறது.
குழந்தைகள் உலகின் களங்கமின்மை, அன்பின் வெளிப்பாடுகள், மனித நேயம் ஆகியவை இப்படத்தை என்றைக்குமான, எல்லோருக்குமான திரைப்படமாக மாற்றியுள்ளது. பொதுவாக 'சிம்பதி' உருவாக்க, குழந்தைகளை அவர்களை சுற்றியிருப்பவர்கள் துன்புறுத்துவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் காட்டுவது இயக்குனர்கள் கையாளும் யுக்தி. மாறாக, 'சில்ட்ரன் ஆஃப் ஹெவனில்' சிறுவர்களை சுற்றியிருப்பவர்கள் கருணையுள்ளவர்களாக அவர்களுக்கு உதவுகிறவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். பெரிய அளவில் அவர்கள் எந்த துயரத்துக்கும் ஆளாவதில்லை. படத்தின் கடைசி காட்சியில், அலி அவன் சகோதரியை சந்திப்பதற்கு முன்பு, அவன் தந்தை கடையிலிருந்து ஜாராவுக்காக ஷூ வாங்கும் காட்சி காட்டப்படுகிறது. இருந்தும் சிறுவர்களின் மீது பார்வையாளர்களின் மனதில் கருணை ஊற்றெடுக்கிறது. இதற்கு, மஜித் மஜிதின் எளிமையான, யுக்திகள் ஏதுமற்ற நேரடியான கதைக்கூறல் ஒரு முக்கியக் காரணம்.
நல்ல சினிமா எடுக்க நினைக்கும் இயக்குனர்களுக்கும், பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' தவிர்க்கக்கூடாத தேர்வு!
இயக்குனர் மஜித் மஜிதியின் திரைப்படங்கள்.
1) The Willow Tree (2005)
2) Olympics in Camp (2003)
3) Barefoot to Herat (2002)
4) Baran (2001)
5) The Colour of Paradise (1999)
6) The Children of Heaven (1997)
7) The Father (1996)
8) God Shall Come (1995)
9) The Last Village (1993)
10) Baduk (1992)
|
Feedback!
|
|