கேரளாவிலிருந்து வரும் மலையாள தேவதைகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருக்க, தமிழிலிருந்து கேராளாவுக்கு சென்று மலையாள ரசிகர்களின் கனவு பிரதேசங்களில் மையம் கொண்டிருக்கிறார் 'பொய்' விமலாராமன். ஸாரி... இப்போது வெறும் விமலாவாக பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.
பெற்றோரின் பூர்வீகம் தென்மாநிலம் என்றாலும் வேலை நிமித்தமாக முப்பது வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு ப்ளைட் பிடித்தவர்கள். விமலா பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிட்னிதான். தகவல் தொழில்நுட்பம் பயின்றிருக்கிறார். ஐந்து வயதில் அபிநயம் பிடிக்க ஆரம்பித்தவர் பரத கலையில் தேர்ச்சிபெற்றவர்.
2004-ம் ஆண்டு மிஸ் இண்டிங் ஆஸ்திரேலியா போட்டியில் பட்டத்தை தட்டிச்சென்ற இந்த பட்டாம் பூச்சி, 'பொய்' மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பாலசந்தரின் அறிமுகம் என்ற பெருமையுடன் இருக்கும் விமலா, கேரளா திரையுலகில் படு பிரபலம்.
தமிழ் சினிமாவை மறந்துட்டீங்களா?
கண்ணத்தில் வருடிய முடிகற்றை ஒதுக்கிவிட்டபடி உரையாட ஆரம்பித்தார் சிட்னி சிங்காரி.
"அப்படியெல்லாம் இல்லை தமிழில் அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த நேரத்தில் மலையாளத்திலிருநது அழைப்பு. சரி ஒரு படத்தில் நடித்துவிட்டு திரும்பிடலாம்னு போனா, அடுத்தடுத்து மூன்று படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்ட தேவதையை பயன்படுத்திக்கொண்டேன்.
ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் சுரேஷ்கோபியுடன் 'டைம்' படத்தில் நடிச்சிருக்கேன். இதில் எனக்கு பூக்காரி வேடம். படம் வெளிவந்து வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. கேரளாவுல இப்போ நான் எந்த பக்கம் போனாலும் ரசிகர்களிடமிருந்து பிளையிங் கிஸ் பறக்குது.
அடுத்து 'பிரணய காலம்' என்ற படத்தில் நடித்திருக்கேன். உதய் ஆனந்த் இயக்கியுள்ளார். ஜுன் முதல் வாரம் படம் வெளியாகிறது. ஜெயராம் ஜோடியா 'சூர்யன்' படத்திலும் நடித்திருக்கேன். மோகன்லால்கூட ஒரு படத்திலும் நடிக்கப் போறேன்.
தமிழ், தெலுங்கிலும் இப்போது நிறைய வாய்ப்புகள் வருது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கு.
கனவு கதாபாத்திரம்?
கோட்டை கொத்தளங்களை கதைக்களமாக கொண்ட தேவதாசி மாதிரியான கேரக்டரில் நடிக்கனும்னு ஆசை இருக்கு. அப்புறம் எனக்கு கிளியோபாட்ரானா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல கிளியோபாட்ரா மாதிரி பேன்சி டிரஸ் போட்டிருக்கேன். சினிமாவுல அந்தமாதிரி கேரக்டர் கிடைத்தால் பிரமாதப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.
கிளாமர் இல்லாவிட்டால் இன்றைய சினிமாவில் நீடிக்கமுடியாது என்ற நிலை இருக்கிறதே?
ருசிக்காக சாப்பிட்டில் உப்பு சேர்த்துக்கிடலாம். உப்பே சாப்பாடாகிவிடாது. கிளாமருக்கான என்னோட உதாரணம் இதுதான். சினிமா என்பதே கிளாமர்தான்!"